குரு பெயர்ச்சி 2023 - 24 | கன்னி ராசியினருக்கு எப்படி? - முழுமையான பலன்கள்

By Guest Author

கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்) பலன்கள்: சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் செயல்படும் நீங்கள், சுயநலமில்லாதவர்கள். இதுவரை உங்கள் ராசியை நேருக்குநேர் பார்த்துக் கொண்டிருந்த குருபகவான் கொஞ்சம் நல்லதையும், கெட்டதையும் சேர்த்துக் கொடுத்தாரே! இப்போது ஏப்.22, 2023 முதல் மே 01, 2024 வரை உங்கள் ராசிக்கு 8-வது வீட்டில் சென்று மறைகிறார். 8-ல் நிற்கும் குருவால் எல்லாம் தட்டிக்கொண்டே போகுமே, இருப்பதை எல்லாம் இழக்க நேரிடுமே என்று கலங்காதீர்கள்.

உபய ராசியில் பிறந்த உங்களுக்கு குரு பாதகாதிபதியாவார். அப்படிபட்டவர் 8-ல் மறைவதால் குருவால் ஏற்படும் கெடுபலன் குறைந்து நல்லதே நடக்கும். உங்கள் ராசிநாதனான புதனுக்கு பகைவரான குரு 8-ல் மறைவதால் கணவன் மனைவிக்குள் சந்தோஷம் கிட்டும். பிரிந்தவர்கள் ஒன்று சேர்வீர்கள். சில விஷயங்களை அதிக செலவு செய்து முடிக்க வேண்டியது வரும். மற்றவர்களை நம்பி எந்த பொறுப்பையும் ஒப்படைக்காமல் நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது. சில காரியங்கள் தடைபட்டு முடியும்.

குருபகவான் உங்களது 2-ம் வீட்டை பார்ப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வீண் சந்தேகம் தீரும். மனைவி வழி உறவினர்களால் இருந்து வந்த சங்கடங்கள் தீர்ந்து நல்லது நடக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பழுதான மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள். இனி ஆழ்ந்த உறக்கம் வரும்.

குரு உங்கள் சுக ஸ்தானத்தைப் பார்ப்பதால் உடல் சோர்வு, வீண் அலைச்சல், டென்ஷன் விலகும். தாய்வழிச் சொத்து கைக்கு வரும். குரு 12-ம் வீட்டை பார்ப்பதால் புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். அரைகுறையாக நின்று போன வேலைகளை இனி விரைந்து முடிப்பீர்கள். வெகுநாட்களாக இழுபறியில் இருந்து வந்த வழக்குகள் சாதகமாக முடியும். அரசியல்வாதிகள் வீண் பேச்சில் காலம் கழிக்காமல் செயலில் ஆர்வம் காட்டுவது நல்லது. தலைமையின் பார்வை உங்கள் மேல் விழும்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: ஏப்.22, 2023 முதல் ஜூன் 23, 2023 வரை மற்றும் நவ.23, 2023 முதல் பிப்.06, 2024 வரை குருபகவான் அசுவனி நட்சத்திரத்தில் செல்வதால் ஒரு பக்கம் அலைச்சல் இருந்தாலும் முன்னேற்றமும் உண்டு. சிறுசிறு விபத்துகள், பொருள் இழப்புகள் வந்து நீங்கும். ஆனால் பணவரவு குறையாது. புகழ், கவுரவம் கூடும். அரசால் ஆதாயம் உண்டு.

ஜூன் 23, 2023 முதல் நவ.22, 2023 வரை மற்றும் பிப்.06, 2024 முதல் ஏப்.17, 2024 வரை உங்கள் தனபாக்யாதிபதியான சுக்ரனின் பரணி நட்சத்திரத்தில் செல்வதால் திடீர் வெற்றி, வாகனம், ஆடை, ஆபரணச் சேர்க்கை, வீடு வாங்குவது, கட்டுவது யாவும் உண்டாகும்.

ஏப்.17, 2024 முதல் மே 01, 2024 வரை குருபகவான் கார்த்திகை 1-ம் பாதத்தில் செல்வதால் அரசு விஷயங்களில் கவனம் தேவை. தந்தையாருக்கு மருத்துவச் செலவுகள் உண்டு.

செப்.11, 2023 முதல் டிச.20, 2023 வரை குருபகவான் வக்ர கதியில் செல்வதால் கொஞ்சம் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. கணவன் - மனைவிக்குள் ஈகோ வந்து நீங்கும். அவ்வப்போது ஒரு வெறுமையை உணருவீர்கள்.

வியாபாரத்தில் பழைய பாக்கிகளை கறாராகப் பேசி வசூலிப்பது நல்லது. கடையை வேறிடத்துக்கு மாற்ற வேண்டி வரும். விளம்பர யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களை அதிகப்படியாக வரவழைப்பீர்கள். புது ஒப்பந்தங் கள் கையெழுத்தாகும். பங்குதாரர்களிடம் இருந்து வந்த கூச்சல், குழப்பம் நீங்கும்.

உத்தியோகஸ்தகளே! எவ்வளவு உழைத்தும் உங்களை குறை சொல்லிக் கொண்டிருந்த நிலை இனி மாறும். வெகுநாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு இனி தேடி வரும். டிசம்பர், ஜனவரி மாதங்களில் புது சலுகைகள் கிடைக்கும். கணினி துறையினர்களுக்கு வேலைபளு அதிகரிக்கும். புதுசலுகைகள் கிடைக்கும்.

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி கடனையும் அதே நேரம் சொத்து சேர்க்கையையும், அலைச்சலையும் அதே நேரம் ஆதாயத்தையும் தருவதாக அமையும்.

பரிகாரம்: கடலூர் அருகிலுள்ள திருவந்திபுரம் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீ ஹயக்ரீவரை புதன்கிழமைகளில் சென்று வணங்குங்கள். பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியோருக்கு உதவுங்கள். வளம் பெருகும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE