குரு பெயர்ச்சி 2023 - 24 | மிதுனம் ராசியினருக்கு எப்படி? - முழுமையான பலன்கள்

By Guest Author

மிதுனம் (மிருகசீரிஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்) பலன்கள்: வசதி, வாய்ப்புகள் வந்த பின்னும், பழசை மறவாதவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 10 ம் வீட்டில் அமர்ந்து கொண்டு எந்த வேலையையும் செய்ய விடாமல் முடக்கி வைத்த குருபகவான் இப்போது ஏப்.22, 2023 முதல் மே 01, 2024 வரை உங்கள் ராசிக்கு லாப வீட்டுக்குள் நீடிப்பதால் தொட்டதெல்லாம் துலங்கும்.

சோர்ந்திருந்த நீங்கள் உற்சாகமடைவீர்கள். பதுங்கியிருந்த நீங்கள் வெளிச்சத்துக்கு வருவீர்கள். வருமானம் உயரும். பிரபலங்கள், நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். கணவன் - மனைவியிடையே இனி அன்யோன்யம் பிறக்கும். சகோதரியின் திருமணம் சிறப்பாக முடியும். ஷேர் மூலம் பணம் வரும். கோபம் தணியும். தங்க நகைகள் சேரும். உங்களை அலட்சியப்படுத்திய உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். கல்யாண விசேஷங்களில் முதல் மரியாதை கிடைக்கும்.

உங்கள் ராசிக்கு 3 ம் வீட்டை குரு பார்ப்பதால் இளைய சகோதர வகையில் மகிழ்ச்சியுண்டு. புது தெம்பு பிறக்கும். கடினமான வேலையை கூட இனி எளிதாக முடிப்பீர்கள். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். அடகிலிருந்த பொருட்களை மீட்பீர்கள். அடிமனதில் இருந்த பய உணர்வு நீங்கும். வீடு கட்டும் பணியை முடிப்பதற்கு வங்கிக் கடனுதவி கிடைக்கும். வி.ஐ.பிகளின் வீட்டு விஷேசங்களில் கலந்து கொள்வீர்கள். குரு 5 ம் வீட்டை பார்ப்பதால் குழந்தை இல்லாத தம்பதியருக்கு குழந்தை பாக்யம் கிட்டும்.

குரு உங்களின் 7 ம் வீட்டை பார்ப்பதால் மனைவி மற்றும் மனைவி வழி உறவினர்களுடன் இருந்து வந்த மனஸ்தாபங்கள் நீங்கும். இழுபறியாக இருந்த பூர்வீகச் சொத்துப் பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். தாய்மாமன், அத்தை வழியில் இருந்து வந்த பிணக்குகள் விலகும். உங்களிடமிருந்த எதிர்மறை எண்ணங்கள் நீங்கும். கூட்டாகத் தொழில் தொடங்கும் வாய்ப்பு உண்டு. அரசியவாதிகள் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவார்கள். தலைமை உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்கும். சகாக்கள் மத்தியில் மதிப்பு கூடும்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: ஏப்.22, 2023 முதல் ஜூன் 23, 2023 வரை மற்றும் நவ.23, 2023 முதல் பிப்.06, 2024 வரை குருபகவான் அசுவினி நட்சத்திரத்தில் செல்வதால் பணபலம் உயரும். புதியவர்களின் நட்பால் வாழ்க்கையில் திடீர் மாற்றம் உண்டாகும்.

ஜூன் 23, 2023 முதல் நவ.22, 2023 வரை மற்றும் பிப்.06, 2024 முதல் ஏப்.17, 2024 வரை உங்கள் பூர்வ புண்யாதிபதியான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் செல்வதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பூர்வீகச் சொத்து சிக்கல்கள் தீரும். வழக்கில் வெற்றி உண்டு.

ஏப்.17, 2024 முதல் மே 01, 2024 வரை குருபகவான் கார்த்திகை 1-ம் பாதத்தில் செல்வதால் தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். செல்வாக்கு கூடும். சகோதர வகையில் நன்மை உண்டு.

செப்.11, 2023 முதல் டிச.20, 2023 வரை குருபகவான் வக்ர கதியில் செல்வதால் இக்காலக்கட்டத்தில் வாகன விபத்து, மின்னணு, மின்சார சாதனப் பழுது, தொண்டைப் புகைச்சல், சளித் தொந்தரவு வந்து போகும்.

வியாபாரத்தில் புதிய முதலீடுகளைப் போட்டு கடையை விரிவுபடுத்துவீர்கள். மே, மார்ச், ஏப்ரல் மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். வாடிக்கையாளர்களை கவர புது சலுகைகளை அறிவிப்பீர்கள். மருந்து, உணவு, கமிஷன், இரும்பு வகைகளால் லாபமடைவீர்கள். பங்குதாரர்களிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும்.

உத்தியோகத்தில் இழந்த சலுகைகளையும், மதிப்பு மரியாதையையும் மீண்டும் பெறுவீர்கள். வேலைச்சுமை குறையும். தலைமைப் பொறுப்பு தேடி வரும். தள்ளிப் போன பதவி உயர்வு, சம்பள உயர்வு இனி ஜூன், மார்ச், ஏப்ரல் மாதங்களில் தடையில்லாமல் கிடைக்கும். கணினி துறையினருக்கு வெளிநாட்டு நிறுவனங்களிலிருந்து அதிக சம்பளத்துடன் கூடிய அழைப்பு வரும்.

மொத்தத்தில் இந்த குரு மாற்றம் அணைக்கட்டிலிருந்து வெளியேறும் நீரைப் போல் விரைந்து செயல்பட்டு வெற்றியை அள்ளித் தருவதாக அமையும்.

பரிகாரம்: திருவையாறுக்கு அருகிலுள்ள திருப்பழனம் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரரையும், ஸ்ரீ தட்சிணாமூர்த்தியையும் நெய் விளக்கேற்றி வணங்குங்கள். கட்டிடத் தொழிலாளிக்கு உதவுங்கள். சாதித்துக் காட்டுவீர்கள்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE