குரு பெயர்ச்சி பொதுப்பலன் - ஏப்.22, 2023 முதல் மே 1, 2024 வரை | ஒரு பார்வை

By Guest Author

மீனத்தில் இருந்து மேஷத்திற்கு: நிகழும் மங்களகரமான சோபகிருது வருடம் சித்திரை மாதம் 9-ம் தேதி சனிக்கிழமை (22.04.2023) சுக்ல பட்சத்து துவிதியை திதி, கார்த்திகை நட்சத்திரம், ஆயுஷ்மான் நாமயோகம், கௌலவம் நாமகரணம், ஜீவனம் நிறைந்த சித்த யோகத்தில், மேஷ லக்னத்தில், சந்திரன் ஓரையில், குரு பகவான் மீனத்திலிருந்து மேஷம் ராசிக்குள் அதிகாலை 5 மணி 14 நிமிடத்துக்கு பெயர்ச்சியாகிறார். காலப்புருஷ தத்துவப்படி குருபகவான் முதல் ராசியான மேஷ ராசியில் நுழைவதால் சொத்து மதிப்பு உயரும்.

பொதுப்பலன்: வீட்டு மனை, விவசாய நிலங்கள் வைத்திருப்பவர்கள் அவசரப்பட்டு விற்பனை செய்ய வேண்டாம். ரியல் எஸ்டேட் தொழில் அதிக லாபம் தரும். புறம்போக்கு நிலங்களை செல்வாக்குடையவர்கள் வளைத்து போடுவார்கள். ஆனால் யானைப்பாதை நிலங்கள் அரசு நிலங்கள் மற்றும் பஞ்சமி நிலங்களை ஆக்கிரமித்தவர்கள் அப்புறப்படுத்தப்படுவார்கள்.

குருபகவான் துலாம் ராசியை பார்ப்பதால் நீதிபதிகளின் கை ஓங்கும். அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்கள் மற்றும் அதிகாரிகளை நீதிமன்றம் அடக்கும். பாலியல் வன்கொடுமை மற்றும் போதை மருந்துக்கு எதிரான சட்டங்கள் கடுமையாகும். சாதாரண பாட்டாளி மக்களின் பக்கம் நீதித்துறை திரும்பி நியாயத்தை தரும். வியாபாரிகள் அதிக லாபம் அடைவார்கள்.

சுய தொழில் தொடங்குவோர் அதிகரிப்பர். இந்திய வியாபாரிகள் உலக அளவில் அதிக தனம் ஈட்டுவார்கள். சில மாநிலங்களில் வர்த்தகர்களின் கைகளில் ஆட்சி, அதிகாரம் மாறும். தானியங்களை பதுக்குபவர்கள் பிடிபடுவார்கள். சில தானியங்கள் மற்றும் தங்கத்தின் விலை உயரும்.

மருத்துவத் துறை நவீனமாகும். மருந்து உற்பத்தி அதிகரிக்கும். சில மருந்துகளின் விலை உயரும். காலாவதியான மருந்துகள் கண்டறியப்பட்டு அழிக்கப்படும். ஆட்சியில் இருப்பவர்களின் கை ஓங்கும். இதய நோய் மற்றும் புற்று நோயை குணப்படுத்த புதிய மருந்துகள் கண்டறியப்படும். எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமை குறையும். சிறுபான்மை மக்களின் வாக்கு வங்கி சிதறும். இந்தியாவில் அடிப்படை கட்டமைப்புகள், சாலை வசதிகள் மற்றும் இண்டர்நெட், வைஃபை வசதிகள் அதிகரிக்கும். உலகமே வியக்கும் வண்ணம் புதிய தொழில்நுட்பம் கொண்ட செயற்கைக் கோள்களை இந்தியா ஏவும்.

இந்தியாவின் அன்னியச் செலாவணி கையிருப்புத் தொகை அதிகரிக்கும். உலக அளவில் இந்தியாவில் பணமதிப்பு உயரும். மக்கள் மத்தியில் சேமிக்கும் குணம் ஆரம்பமாகும். ஆசிரியர்களை கட்டுப்படுத்த புது சட்டங்கள் வரும். மாணவர்களின் நினைவாற்றல் அதிகமாகும்.

22.04.2023 முதல் 30.10.2023 வரை குருபகவான் ராகுவுடன் நிற்பதால் ஆன்மிக ஸ்தலங்களிலுள்ள விலை உயர்ந்த தங்க, வைர ஆபரணங்கள் நூதனமாக திருடப்படும். ஆங்காங்கே வகுப்பு கலவரங்களும், கரோனா பாதிப்புகளும் அதிகமாகும். விமான விபத்துகள், மின் விபத்துகள் அதிகரிக்கும். நிலநடுக்கங்களும் இருக்கும்.

நவம்பர் மாதம் முதல் மக்கள் மத்தியில் மகிழ்ச்சி உண்டு, பொருளாதார நெருக்கடி குறையும். ரசாயன உற்பத்தி பெருகும். தமிழ்நாட்டில் மூடப்பட்டுள்ள முக்கிய ஆலை செயல்படத் தொடங்கும். வேலையை இழப்போர் ஒரு புறம் அதிகரித்தாலும் புது வேலை வாய்ப்புகளும் அதிகரிக்கும்.

மொத்தத்தில் இந்த குரு மாற்றம் மக்கள் மத்தியில் மகிழ்ச்சியையும் தைரியத்தையும் தருவதாக இருக்கும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE