மேஷம், ரிஷபம், மிதுன ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான்! 24ம் தேதி முதல் 30ம் தேதி வரை

By செய்திப்பிரிவு


மேஷம்: ராசியில் ராகு - களத்திர ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் செவ், சுக், சனி - லாப ஸ்தானத்தில் குரு - அயன சயன போக ஸ்தானத்தில் சூர்யன், புதன் என கிரகங்கள் வலம் வருகின்றன. இந்த வாரம் சுபநிகழ்ச்சிகளில் இருந்த தடைகள் அனைத்தும் நீங்கும். அடுத்தவர் சுமத்திய வீண் குற்றச்சாட்டுகளில் இருந்து சாமர்த்தியமாக விடுபடுவீர்கள். திடீர் மனவருத்தம் அகலும்.

வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. சுக்கிரனுடைய சஞ்சாரத்தால் பணத்தேவை ஏற்பட்டாலும் அதை திறமையாக சமாளித்து விடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டாலும் அதை சமாளிக்கும் திறமை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகப் பணிகளில் அலட்சியம் காட்டாமல் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை காணப்பட்டாலும் குடும்ப உறுப்பினர்களுக்காக மருத்துவச் செலவு செய்ய வேண்டி இருக்கலாம்.

பிள்ளைகளை அவர்களின் போக்கிலேயே விட்டுப் பிடிப்பது நன்மை தரும். பெண்களுக்கு மற்றவர்களால் ஏற்படும் தொல்லைகளில் சிக்காமல் இருக்க கவனமாக செயல்படுவது நல்லது. அரசியல்வாதிகள் வீண் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுபடுவீர்கள். கலைத்துறையினர் வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வியில் மெத்தனப் போக்கு காணப்படும். மிகவும் கவனமாகப் படிப்பது கல்வியில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.


பரிகாரம்: ஆதிபராசக்தி அன்னையை தரிசித்து வருவது உடல் ஆரோக்கியத்தைத் தரும். எதிர்பார்த்த காரியம் தாமதமாக முடியும். ஆனால் நல்ல பலனைத் தரும்.
****************


ரிஷபம்: ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் செவ், சுக், சனி - தொழில் ஸ்தானத்தில் குரு - லாப ஸ்தானத்தில் சூர்யன், புதன் - அயன சயன போக ஸ்தானத்தில் ராகு என கிரகங்கள் வலம் வருகின்றன. இந்த வாரம் உங்களுக்கு அனுகூலம் தரும் வகையில் இருக்கிறது. வீண்செலவு ஏற்பட்டாலும் அதை சமாளிக்கும் விதத்தில் வரவும் இருக்கும். பயணங்கள் மூலம் அலைச்சல், அதிருப்தி உண்டாகலாம்.

கனவுகளால் தொல்லை ஏற்படலாம். சரியான நேரத்தில் தூங்க முடியாத சூழ்நிலை உருவாகும். உஷ்ண சம்பந்தமான நோய் உண்டாகலாம். தொழில் வியாபாரத்தில் பணத்தேவை ஏற்படலாம். கடன் விவகாரங்களில் கவனமாக செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஓய்வு இல்லாமல் பணியாற்ற வேண்டி இருக்கும். குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் உருவாகலாம். வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் உண்டாகலாம்.

உறவினர்களிடம் கவனம் தேவை. பெண்களுக்கு மற்றவர்களின் வேலைகளுக்காக அலைய நேரிடும். அரசியல்வாதிகளுக்கு வரவு நன்றாக இருக்கும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். மாணவர்கள் கல்வியைத் தவிர மற்றவைகளில் கவனத்தை சிதற விடலாம். விளையாட்டுப் போட்டிகளின் போது உடல்நலத்தின் மீது அதிக கவனம் அவசியம்.


பரிகாரம்: திருப்பாவை சொல்லி தாயாரை வணங்கி வர துன்பங்கள் விலகும். மனநிம்மதி குடும்பத்தில் குதூகலம் உண்டாகும்.
**************


மிதுனம்: பஞ்சம ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் செவ், சுக், சனி - பாக்கிய ஸ்தானத்தில் குரு - தொழில் ஸ்தானத்தில் சூர்யன், புதன் - லாப ஸ்தானத்தில் ராகு என கிரகங்கள் வலம் வருகின்றன. இந்த வாரம் எல்லாவற்றிலும் சாதகமான பலனே கிடைக்கும். பொருளாதார முன்னேற்றம் பணவரவில் திருப்தி ஆகியவை இருக்கும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் உண்டாகும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும்.

தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நீங்கி வேகம் பிடிக்கும். லாபம் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல்திறன் அதிகரிக்கும். மேல் அதிகாரிகளின் பாராட்டும், பதவி உயர்வும் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். ஒற்றுமை உண்டாகும். உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் உண்டாகும்.

திருமணம் தொடர்பான பேச்சுகள் சாதகமாக முடியும். வீடு, வாகனம் வாங்குவது அல்லது புதுப்பிப்பதில் நாட்டம் அதிகரிக்கும். பெண்களுக்கு மதிப்பு மரியாதை அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு வீண் பயணம் ஏற்படலாம். அரசியல்வாதிகளுக்கு மேலிடத்துடன் இருந்து வந்த தொய்வு நிலை நீங்கும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை நீங்கும். பாடங்கள் படிப்பதில் வேகம் காட்டுவீர்கள். பாராட்டு கிடைக்கலாம்.


பரிகாரம்: லட்சுமி நரசிம்மரை வணங்கி வர எதிர்ப்புகள் நீங்கும். தொழிற்போட்டிகள் குறையும்.
**************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE