ராகு கேது பெயர்ச்சி ; பொது பலன்கள்; பூமிப் பிரச்சினை; கல்வியில் தொய்வு; வெப்பம் அதிகம்! - 2022 - 2023 எப்படியிருக்கும்?

By செய்திப்பிரிவு

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்


நிகழும் மங்கலகரமான ஸ்வஸ்திஸ்ரீ ப்லவ வருஷம் உத்தராயனம் சிசிரரிது பங்குனி மாதம் 07ம் தேதி - 21.03.2022 திங்கட்கிழமை - க்ருஷ்ண பக்ஷ சதுர்த்தி - ஸ்வாதி நட்சத்திரம் - வ்யாகாத நாமயோகம் - பவ கரணம் - அமிர்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 22.12க்கு (உதயாதி மாலை மணி 03.13க்கு) கடக லக்னத்தில் ராகு பகவான் ரிஷப ராசியில் இருந்து மேஷ ராசிக்குள் பிரவேசிக்கிறார்.


நிகழும் மங்கலகரமான ஸ்வஸ்திஸ்ரீ ப்லவ வருஷம் உத்தராயனம் சிசிரரிது பங்குனி மாதம் 07ம் தேதி - 21.03.2022 திங்கட்கிழமை - க்ருஷ்ண பக்ஷ சதுர்த்தி - ஸ்வாதி நட்சத்திரம் - வ்யாகாத நாமயோகம் - பவ கரணம் - அமிர்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 22.12க்கு (உதயாதி மாலை மணி 03.13க்கு) கடக லக்னத்தில் கேது பகவான் விருச்சிக ராசியில் இருந்து துலாம் ராசிக்குள் பிரவேசிக்கிறார்.

ராகு கேது - ஓர் அறிமுகம்:


ராகு - கேதுக்கள் சகோதரர்களாவார்கள். ராகுவும் கேதுவும் சாயா கிரகங்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஆனால் மற்ற கிரகங்களுக்கு இல்லாத ஒரு சிறப்பு இந்த கிரகங்களுக்கு உண்டு. எந்த வீட்டில் இருக்கிறார்களோ அவர்களது ஆதிபத்தியத்தை இந்த கிரகங்கள் நமக்குக் கொடுப்பார்கள். உதாரணமாக ஜெனன கால ஜாதகத்தில் மேஷ ராசியில் ராகு இருக்கிறார் என்றால் அவர் மேஷ ராசியின் அதிபதியாகிய செவ்வாயின் ஆதிபத்தியத்தை எடுத்துக் கொள்வார்.


அறிவியல் பூர்வமாக நமது DNAதான் நம்மைப் பற்றியும் நமது முன்னோர்களைப் பற்றியும் சொல்லும் விஷயம். ராகு - கேது எனும் கிரகங்கள் DNA போலதான். ராகுவை வைத்து தகப்பனார் வழிகளையும் - கேதுவை வைத்து தாயார் வழிகளையும் புரிந்து கொள்ள இயலும். எனவே தான் ராகு தந்தை வழி காரகன் என்றும் கேதுவை தாய் வழி காரகன் என்றும் சொல்கின்றனர்.


ராகு கேதுக்களை வைத்துதான் தார தோஷம்- களத்திர தோஷம் - பிதுர் தோஷம் - புத்திர தோஷம் முதலானவற்றை சொல்ல முடியும்.
கல்வி - ஞானம் - திருமணம் - மக்கட்பேறு - வேலை - வெளிநாடு சம்பாத்தியம் - கர்மா போன்ற நமது வாழ்வின் இன்றியமையாத காரகங்களுக்கு ராகு கேது முக்கியமானவர்கள்!


பொது பலன்கள்:
உலக அளவில் அரசு சார்ந்த விஷயங்களில் சிறிது பிரச்சினைகள் தலைதூக்கலாம். கிருத்திகை நட்சத்திரத்தில் ராகுவும் - விசாக நட்சத்திரத்தில் கேதுவும் சஞ்சாரம் செய்கிறார்கள். ராகுவினுடைய அம்சம் என்பது சூரியனுடைய நட்சத்திரம் - செவ்வாய் ராசியில் சஞ்சரிக்கிறார். கேது குருவினுடைய நட்சத்திரம் - சுக்கிரன் ராசியில் இருக்கிறார். அரசாங்கம் ஒவ்வொரு முடிவையும் தவறாக எடுப்பதும் அதற்கு பரிகாரமாக மேல் மட்டத்தில் இருக்கும் அதிகாரிகள் அதை சரி செய்வதுமாக இருக்கும். ராகுவினுடைய மாற்றம் செவ்வாய் வீட்டில் இருக்கிறது.

சனியின் பார்வை கேதுவின் மீது விழுகிறது. நாடுகளுக்குள் மோதல்கள் வரலாம். இந்த வருடம் வெப்பம் அதிகமாக இருக்கும். பண நடமாட்டம் சீராக இருக்கும். கல்வி சார்ந்த விஷயங்களில் தொய்வு ஏற்படும். அதேவேளையில் சுக்கிரனின் வீட்டில் கேது சாரம் இருப்பதன் மூலம் பொருளாதாரம் மிக அதிகமான வளர்ச்சி காணும். பூமி, நிலம் சம்பந்தமான பிரச்சினைகள் அதிகமாவதும் அதைத் தீர்க்க நீதிமன்றத்தை நாடுவதும் அதிகமாகும். அறுவை சிகிச்சை சம்பந்தமான புதிய கண்டுபிடிப்பு உருவாகும்.

அதேவேளையில் ராகுவிற்கு கேந்திரத்தில் சனி பகவான் இருக்கிறார். ஆன்மிகம் - கோயில் சம்பந்தமான பிரச்சினைகளில் சிறிது சுணக்கம் ஏற்படும். ராகு - கேது சஞ்சாரம் செய்யும் இடங்களால் கலப்புத் திருமணங்கள் அதிகமாகும். நிலம் - நீர் - காற்று - ஆகாயம் - நெருப்பு என பஞ்சபூதங்கள் மூலமாகவும் மக்களுக்கு பிரச்சினைகள் ஏற்படும். தற்கொலைகள் அதிகமாகும்.


பொது பரிகாரம்:
ராகுவும் கேதுவும் நாகம் சம்பந்தமான கிரகங்கள் என்பதால் அடிக்கடி நாகதேவதையை வணங்குவது நல்லது.
ராகுவிற்கு ஸ்ரீதுர்கை அம்சமுள்ள அம்மனையும் - கேதுவிற்கு விநாயகர் - ஆஞ்சநேயரையும் வணங்குவது நன்மை தரும்.
*****************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE