துலாம் ராசி அன்பர்களே! டிசம்பர் மாத பலன்கள்; காரிய வெற்றி; ஒற்றுமை கூடும்; கட்டுப்பாடு அவசியம்; எதிர்பார்த்த இடமாற்றம்! 

By செய்திப்பிரிவு

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்


துலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)


கிரகநிலை:


ராசியில் சந்திரன், செவ்வாய் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன், புதன், செவ்வாய் - தைரிய ஸ்தானத்தில் சுக்ரன் - சுக ஸ்தானத்தில் சனி - பஞ்சம ஸ்தானத்தில் குரு - அஷ்டம ஸ்தானத்தில் ராகு என கிரகநிலை உள்ளது.


கிரக மாற்றங்கள்:


04-12-2021 அன்று புதன் பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
05-12-2021 அன்று சுக்ர பகவான் தைரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
06-12-2021 அன்று செவ்வாய் பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
28-12-2021 அன்று புதன் பகவான் தைரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.


பலன்கள் :


அளவான பேச்சுடன் வேலையை சரியாக செய்து முடிக்கும் துலா ராசி அன்பர்களே!


இந்த மாதம் ராசிநாதன் சுக்கிரன் யோக ஸ்தானத்தில் இருக்கிறார். எதிலும் தன்னம்பிக்கையுடன் ஈடுபட்டு காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். புதிய தொடர்புகள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். முக்கிய நபர்களின் அறிமுகமும் நட்பும் கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்பார்த்தபடி எல்லாம் நடந்தாலும் மற்றவர்கள் தவறாக புரிந்து கொள்ள நேரலாம் கவனம் தேவை.


தொழில் ஸ்தானத்தை ராசிநாதன் சுக்கிரன் பார்க்க பாக்கியஸ்தானத்தை தனாதிபதி செவ்வாய் நோக்குகிறார். தொழில் வியாபாரத்தில் வேகம் அதிகரிக்கும். எதிர்பார்த்தபடி பொருட்களை அனுப்புவதில் இருந்த தாமதம் நீங்கும். பார்ட்னர்களிடம் இருந்து வந்த மனக்கிலேசங்கள் மாறும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திடீர் பயணத்தை சந்திக்க நேரலாம். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. புதிய வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு தக்க பலன் கிடைக்கும். எதிர்பார்த்த இடமாற்றம் ஏற்படும்.


குடும்ப ஸ்தானத்தை அதனதிபதி செவ்வாய் அலங்கரிக்கிறார். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். ஆனாலும் கவனமாக எல்லோரிடமும் அனுசரித்துச் செல்வது நல்லது. கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செல்வது நன்மை தரும். பிள்ளைகளிடம் கவனமாக இருப்பதும் அன்பாகப் பேசுவதும் நல்லது. நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.


பெண்களுக்கு மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் உண்டாகும். அடுத்தவர்களிடம் பழகும் போது கவனம்தேவை.


கலைத்துறையினருக்கு வீண் ஆசைகள் மனதில் தோன்றும். கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. எந்த ஒரு செயலையும் யோசித்துச் செய்வது நல்லது. வீண் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பதும் நன்மை தரும்.


அரசியல்துறையினருக்கு காரியங்களில் திடீர் தடை ஏற்படலாம். திட்டமிட்டு செய்வதன்மூலம் சாதகமான பலன் கிடைக்கும். சக மனிதர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. எதிர்பாராத அலைச்சல் ஏற்படலாம்.


மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் திடீர் தடை, தாமதம் ஏற்படலாம். மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பெரியோர், ஆசிரியர் அரவணைப்பு இருக்கும்.


சித்திரை:
இந்த மாதம் சில காரியங்கள் எதிர்மறையாக நடக்கும். நீங்கள் இதுவரை எதிர்பார்த்த காரியங்கள் எல்லாம் இழுபறியாக நிறைவேறாமல் இருந்தாலும், ஏதோவொரு வகையில் எப்படியும் நடந்துவிடும் என்று நம்பிக்கை இருக்கும்.
சுவாதி:
இந்த மாதம் பழகும் மனிதர்களின் வார்த்தைகளை நம்புவதா வேண்டாமா என்று சமயத்தில் சந்தேகம் ஏற்படலாம். சந்திரன் சஞ்சாரத்தால் வாழ்க்கையில் பிடிப்பும் ஆர்வமும் இல்லாமல் சலிப்பை உண்டாக்கினாலும், நக்ஷத்ரநாதன் ராகு தனது பலத்தால் பாதிப்பை உண்டாக்காமல் காப்பாற்றி வருவார். இனிப்பும் கசப்பும் மாறிமாறி பலன்கள் இருக்கும்.
விசாகம்:
இந்த மாதம் குடும்பத்தில் நிலவி வந்த பிரச்சினைகள் மறையும். சிலருக்கு திருமணம் மற்றும் சுபநிகழ்ச்சிகள் நடப்பதில் தாமதம் ஏற்படும். யாருக்கும் வாக்கு கொடுக்கும் முன் ஆலோசனைகள் செய்து கொள்ளவும்.

பரிகாரம்: லக்ஷ்மி அஷ்டோத்திரம் படித்து மகாலட்சுமியை வணங்க செல்வம் சேரும். செல்வாக்கு உயரும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன், வெள்ளி;
சந்திராஷ்டம தினங்கள்: 17, 18
அதிர்ஷ்ட தினங்கள்: 10, 11
************************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE