2021 - 2022 குருப்பெயர்ச்சி பலன்கள்; தனுசு ராசி அன்பர்களே! தடைகள் அகலும்; காரியத்தில் வெற்றி; கடன் தீரும்; சொத்து சேரும்; ஆரோக்கியம் கூடும்! 

By செய்திப்பிரிவு

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்


தனுசு ராசி அன்பர்களுக்கு வணக்கம்.
இந்த குருப் பெயர்ச்சி தனுசு ராசியினருக்கு எப்படிப்பட்ட பலன்களையெல்லாம் தரும் என்பதைப் பார்ப்போம்.

உங்கள் ராசி அதிபதி குருபகவான் இதுவரை இரண்டாம் இடத்தில் இருந்தார். இப்போது மூன்றாம் இடம் செல்கிறார். இரண்டாம் இடத்தில் நீச்சம் என்னும் அந்தஸ்தை அடைந்து பலவிதமான இன்னல்களுக்கு ஆளாகி விட்டீர்கள். பலவிதமான ஏமாற்றங்கள், ஒருவித மனச்சோர்வு, விரக்தி மனப்பான்மை என பலவிதமான துயரங்களை அடைந்திருப்பீர்கள். இப்போது மூன்றாம் இடமும் செல்வதால் என்ன நடக்கும் என்ற சிந்தனை இப்போது அதிகரித்திருக்கும். உண்மையில் மூன்றாம் இடம் செல்வதால் உங்களுக்கு நன்மைகள் நடக்குமே தவிர நிச்சயமாக கெடுபலன்கள் நடக்காது.

இன்னும் சொல்லப் போனால் இதுவரை இருந்த பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரப்போகிறது. ஒரு நிம்மதி பெருமூச்சு விடப் போகிறீர்கள். உங்களுடைய எண்ணங்கள் அனைத்தும் இப்போது ஈடேறும். தடைபட்டு நின்ற காரியங்கள் அனைத்தும் முழுமையாக நிறைவேறும். தாமதப்பட்டு வந்த பலவிதமான வேலைகள் அனைத்தும் இப்போது தடையில்லாமல் நிறைவேறும். புதிய முயற்சிகளில் ஈடுபட வைக்கும். பயணங்கள் அதிகரிக்கும். சோம்பல் தன்மையை முற்றிலுமாக நீக்கி சுறுசுறுப்பாக குருபகவான் வைத்திருப்பார். குடும்பத்தில் ஏற்பட்டிருந்த பலவிதமான பிரச்சினைகள் அனைத்தும் இப்போது முடிவுக்கு வரும். நிம்மதியற்ற வாழ்க்கையாக இருந்த குடும்பப் பிரச்சினைகள் இனி படிப்படியாகத் தீரும். குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். சகோதரர்களுடன் ஏற்பட்ட மனவருத்தங்கள் தீரும்.

கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். ஒருவித பதட்டம் இருந்திருக்கும். இனி அனைத்தும் நீங்கி தெளிவான சிந்தனை உருவாகும். இனி தொட்டதெல்லாம் வெற்றிகரமாக முடியும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். கருத்து வேறுபாடுகளால் பிரிந்த தம்பதியினர் மீண்டும் ஒன்று சேர்வார்கள். திருமண உறவு தொடர்பாக வழக்குகள் ஏதேனும் இருந்தால் இப்போது வாபஸ் பெறப்பட்டு மீண்டும் குடும்ப வாழ்க்கையில் இணைவார்கள். பாதியில் நின்ற கட்டிடப் பணிகள் தொடரும். சொத்துகள் தொடர்பான பிரச்சினைகள் முடிவுக்கு வரும். அண்டை அயலாருடன் ஏற்பட்ட சண்டை சச்சரவுகள் சமாதானமாகும். வருமானம் திருப்திகரமாக இருப்பதால் மன மகிழ்ச்சி உண்டாகும்.

அலுவலகப் பணிகளில் கடுமையான பணிச்சுமை ஏற்பட்டிருக்கும். எவ்வளவோ கஷ்டப்பட்டு திருப்திகரமாக வேலை செய்து கொடுத்தாலும் அதிலும் குற்றம் குறைகள் கண்டு அதனால் மனச்சோர்வுக்கு ஆளாகி இருப்பீர்கள். இப்போது அந்தப் பிரச்சினையை அனைத்தும் தீரும். அலுவலகத்தில் உங்களுக்கு மதிப்பு மரியாதை உயரும். இடமாற்றம் நிச்சயமாக ஏற்படும். அது விரும்பிய இடமாற்றமாக இருக்கும். வேறு நிறுவனங்களுக்கு மாறும் முயற்சி சாதகமாக இருக்கும். ஏற்கெனவே விரும்பாத இடமாற்றம் ஏற்பட்டிருந்தால் இப்போது விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். வெளிநாடுகளில் வேலைக்கு முயற்சி செய்தால் இப்போது சாதகமாக இருக்கும். அரசுப் பணிக்கு முயற்சி செய்து கொண்டிருந்தவர்கள் இப்போது முழுமையான முயற்சியில் ஈடுபட்டால் அரசு வேலை கிடைக்கும். அலுவலகத்தில் வரவேண்டிய நிலுவைத் தொகை வந்துசேரும். தாமதப்பட்டுக் கொண்டிருந்த பதவி உயர்வு கிடைக்கும். உதாசீனப்படுத்திய உயரதிகாரிகள் இப்போது வலிய வந்து ஆதரவு தருவார்கள். அனைத்து வகையிலும் இப்போது உங்களுக்கு மிகச் சாதகமான காலம் தொடங்கிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

சுயதொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு இப்போது மிகச் சிறப்பான தொழில் வளர்ச்சி ஏற்படக் கூடிய காலம் இது. இதுவரை உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் குரு பகவான் இருந்து நீசமான நிலையில் இருந்ததால் தொழில் தொடர்பாக ஏமாற்றங்களை சந்திக்க வேண்டியது இருந்திருக்கும். இனி அப்படிப்பட்ட ஏமாற்றங்கள் ஏதும் இருக்காது. தொழில் தொடர்பான பயணங்கள் அதிக அளவில் ஏற்படும். அதன் மூலம் ஆதாயம் கிடைக்கும். தொழில் தொடர்பாக பலவித நண்பர்களை சந்திக்க வேண்டியது வரும். அவர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள், அவர்கள் மூலமாக தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் இருப்பவர்களுக்கு வருமானம் இருமடங்காக இருக்கும். இதுவரை தடை பட்டுக் கொண்டிருந்த பணவரவு இனி தடையில்லாமல் கிடைக்கும். புதிய நிறுவனங்களோடு இணைந்து தொழில் தொடங்கும் வாய்ப்பும் பலருக்கு இருக்கிறது. இதுவரை தொழில் தொடங்காதவர்கள் கூட அதற்கான முயற்சியில் ஈடுபடுவார்கள். அந்த முயற்சிக்கு ஆதரவும் உதவிகளும் கிடைக்கும்.

வியாபார வளர்ச்சி அபாரமாக இருக்கும். வியாபாரத்தில் பலவிதமான நன்மைகள் கிடைக்கும். பழைய வாடிக்கையாளர்கள் மீண்டும் வருவார்கள். வியாபாரத்தை விஸ்தரிக்க தேவையான உதவிகள் கிடைக்கும். புதிய வியாபாரங்களை ஆரம்பிக்கும் எண்ணம் ஏற்படும். அந்த எண்ணங்கள் அனைத்தும் இப்போது ஈடேறும். துணிக்கடை மற்றும் நகைக்கடை வியாபாரிகளுக்கு மிகப் பெரிய அளவிலான ஆதாயம் தரக்கூடிய காலகட்டம் தொடங்கி விட்டது. ஆடம்பரப் பொருட்கள் விற்பவர்களுக்கும் இந்த காலகட்டம் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் முழுமையான கவனம் செலுத்தினால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

பத்திரிகை மற்றும் ஊடகத் துறையில் இருப்பவர்களுக்கு மிக சிறப்பான காலகட்டம் தொடங்கிவிட்டது, பம்பரமாக சுழன்று பலவிதமான காரியங்களை சாதிப்பீர்கள். எதிர்பாராத அளவிற்கு ஒரு சிறிய செய்தி கூட புகழின் உச்சிக்கு கொண்டு செல்லும். செய்யும் தொழிலில் கண்ணும் கருத்துமாக இருந்தால் மிகப்பெரிய சாதனைகளைச் செய்யக் கூடிய நேரம் இது. உங்கள் கண்களையும் காதுகளையும் தீட்டிக்கொண்டு இருங்கள். உங்கள் மூலமாக பல விஷயங்கள் வெளிப்படும். புகழ் வெளிச்சம் மட்டுமல்லாமல் பொருளாதாரத் தேவைகளும் பூர்த்தியாகும் காலகட்டம் இது.

கலைத்துறை தொடர்பானவர்களுக்கு நல்ல காலகட்டம் தொடங்கி விட்டது, இதுவரை முடங்கிக்கிடந்த உங்களுடைய கலைத் திறமைகள் அனைத்தும் இப்போது புகழ் வெளிச்சத்திற்கு வரும். துறை சார்ந்த பயிற்சி வகுப்புகள் தொடங்கும் வாய்ப்பு பலமாக உள்ளது. தாமதப்பட்டுக் கொண்டிருந்த பணவரவுகள் இப்போது தாராளமாக கிடைக்கும். அதிகப்படியான ஒப்பந்தங்கள் கிடைக்கும். கலைத்துறையில் ஒரு முக்கியமான இடத்திற்கு நிச்சயமாக செல்வீர்கள். மதிப்பு மரியாதை கிடைக்கும். பரிசுகள் பட்டங்கள் கிடைக்கும். வீண் செலவுகள் ஏதும் செய்யாமல் சொத்துகள் சேர்க்க வேண்டும், கடன் பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். இனி கடன் வாங்கவேண்டிய சூழ்நிலைகள் வராத அளவிற்கு வருமானம் பெருகும்.

பெண்களுக்கு மிகச் சிறப்பான நேரம் தொடங்கிவிட்டது. இதுவரை பலவிதமான துன்பங்களுக்கு ஆட்பட்டு இருந்திருப்பீர்கள். இனி உங்களுடைய துன்ப துயரங்கள் துடைத்தெறியப்படும். வீண் அவப்பெயருக்கு ஆளாகி இருப்பீர்கள். இப்போது அவப்பெயர் நீங்கி உங்கள் மீதான மதிப்பு மரியாதை உயரும். உங்களுடைய எண்ணங்கள் அனைத்தும் இப்போது நிறைவேறும். பலவிதமான ஏமாற்றங்கள் சந்தித்திருப்பீர்கள். இப்போது அனைத்தும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். குடும்பப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். திருமணம் ஆன பெண்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் தீரும். இயல்பான சொத்து சேர்க்கை ஏற்படும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டு. பெற்றோர் வழியில் சொத்துகள் கிடைக்கும். சொந்த வீடு வாங்கும் யோகம் உண்டு. கல்வித் தகுதிக்கு தகுந்த வேலை வாய்ப்பு கிடைக்கும். வெளிநாடு செல்லும் முயற்சி இப்போது சாதகமாக இருக்கும்.

மாணவர்களுக்கு கல்வியில் அபரிமிதமான முன்னேற்றம் ஏற்படும். உயர்கல்வி மாணவர்களுக்கு இப்பொழுது கல்வியை முடித்த உடனே வேலை வாய்ப்பு கிடைக்கும். பட்டயப் படிப்பு, ஆராய்ச்சி படிப்பு பயிலும் மாணவர்களுக்கு இப்போது கல்வியில் ஏற்பட்டிருந்த தடைகள் அனைத்தும் நீங்கி, இப்போது பட்டங்களும் பதவிகளும் தேடி வரும். மிகச் சிறப்பான எதிர்காலம் தொடங்கிவிட்டது.

தனுசு ராசி நேயர்களுக்கு மிகச் சிறந்த பரிகார ஸ்தலம் திருநெல்வேலி காந்திமதி அம்மன் நெல்லையப்பர் ஆலயமாகும். நெல்லையப்பர் ஆலயத்திற்கு சென்று வணங்கி வாருங்கள். நன்மைகள் பெருகும். வாழ்க வளமுடன்.
******************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE