கடகம், சிம்மம், கன்னி ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான்! அக்டோபர் 21 முதல் 27ம் தேதி வரை

By செய்திப்பிரிவு

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், சம், ஆயில்யம்)


கிரகநிலை:
தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய், புதன் - சுக ஸ்தானத்தில் சூர்யன் - பஞ்சம ஸ்தானத்தில் சுக்ரன், கேது - களத்திர ஸ்தானத்தில் குரு, சனி - தொழில் ஸ்தானத்தில் சந்திரன் - லாப ஸ்தானத்தில் ராஹூ என கிரக நிலவரம் உள்ளது.

23-10-2021 அன்று செவ்வாய் பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.


பலன்கள்:

மற்றவர்கள் மீது பரிவுகாட்டும் குணமுடைய கடகராசியினரே!

நீங்கள் திடீரென்று உணர்ச்சி வசப்படக் கூடியவர். இந்த வாரம் சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். பணம் வருவது அதிகரிக்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பதற்கான வாய்ப்புகள் வரும். வெளியூர் பயணங்கள் சாதகமான பலன் தரும். மற்றவர்களின் நலனுக்காக வாதாடி வெற்றி பெறுவீர்கள். கவுரவம், அந்தஸ்து உயரும்.

தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். ஆர்டர்கள் வருவது திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் உண்டாகலாம். புதிய பொறுப்புகள் கிடைக்கும்.

குடும்பத்தில் சுக சௌக்கியம் உண்டாகும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சினைகள் தீரும். கணவன் மனைவிக்கிடையே அன்பான நிலை காணப்படும். பிள்ளைகளின் அறிவுத் திறமை வெளிப்படும்.

பெண்களுக்கு அடுத்தவர்கள் பிரச்சினையை தீர்த்து வைப்பீர்கள். பயணங்கள் சாதகமான பலன் தரும். பொறுப்புகள் கூடும்.
மாணவர்களுக்கு பாடங்களைப் படிப்பதில் திருப்தி உண்டாகும். கல்வி தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடலாம்.

பரிகாரம்: துர்கை அம்மனை செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமையில் எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபட எதிர்ப்புகள் விலகும். காரியத் தடை நீங்கும்.
*************

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

கிரகநிலை:
தன ஸ்தானத்தில் செவ்வாய், புதன் -தைரிய ஸ்தானத்தில் சூர்யன் - சுக ஸ்தானத்தில் சுக்கிரன், கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு, சனி - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் ராகு என கிரக நிலவரம் உள்ளது.


23-10-2021 அன்று செவ்வாய் பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.


பலன்கள்:

தானும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், தன்னுடன் பழகுபவர்களும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட சிம்மராசியினரே!

இந்த வாரம் நிதானமாகப் பேசுவது காரிய வெற்றிக்கு உதவும். மற்றவர்களின் காரியங்களில் ஈடுபடும்போது கவனம் தேவை. உழைப்பு வீணாகலாம். எனவே திட்டமிட்டு எதையும் செய்வது நல்லது.

தொழில் வியாபாரத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வாடிக்கையாளர்களை அனுசரித்து நிதானமாகப் பேசுவது நன்மை தரும். கடனுக்கு பொருள்களை அனுப்பும்போது எச்சரிக்கை தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகளுடன் கவனமாகப் பேசுவது நல்லது.

குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம். பிள்ளைகளிடம் கோபத்தை காட்டாமல் அனுசரித்துச் செல்வது நல்லது.

பெண்களுக்கு திட்டமிட்டு செய்யும் காரியங்கள் வெற்றிகரமாக முடியும். கோபத்தைக் குறைப்பது நன்மை தரும்.

மாணவர்களுக்கு சக மாணவர்களுடன் பழகும்போது கவனம் தேவை. கல்வியில் வெற்றி பெற கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

பரிகாரம்: பிரதோஷ காலத்தில் சிவபெருமானையும், நந்தீஸ்வரரையும் வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். குழப்பம் தீரும்.
*******************


கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)


கிரகநிலை:
ராசியில் செவ்வாய், புதன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சுக்ரன், கேது - பஞ்சம ஸ்தானத்தில் குரு, சனி - அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் ராகு என கிரக நிலவரம் உள்ளது.

23-10-2021 அன்று செவ்வாய் பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.


பலன்கள்:

மனதில் கொண்ட குறிக்கோளை அடையும் வரை சுறுசுறுப்பாக செயல்பட்டு வெற்றி பெறும் கன்னி ராசியினரே!

நீங்கள் உங்களுக்கென்று ஒரு வட்டம் போட்டு அதில் வாழ்பவர். இந்த வாரம் கெட்ட கனவுகள் உண்டாகலாம். எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். உஷ்ண சம்பந்தமான நோய் ஏற்படலாம். எதிர்பார்த்த பணம் கைக்கு வர தாமதமாகும் அதனால் திடீர் பண நெருக்கடி வரலாம். இடம் பொருள் அறியாமல் பேசுவதால் அடுத்தவர்களிடம் மனஸ்தாபம் உண்டாகலாம்.

தொழில் வியாபாரத்தில் திடீர் செலவுகள் உண்டாகும். பணவசூல் தாமதப்படலாம். வீண் அலைச்சல் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையற்ற பயணம் செல்ல நேரலாம். கூடுதல் பொறுப்புகள் அடுத்தவர் பணியைச் செய்வது போன்றவையும் வந்து சேரும்.
குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே மனம்விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தருவதாக இருக்கும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கவலை உண்டாகலாம்.

பெண்களுக்கு எதிர்பாராத செலவு உண்டாகும். அடுத்தவர்களிடம் பழகுவதில் கவனம் தேவை. பணவரத்து தாமதப்படும்.
மாணவர்களுக்கு எந்த ஒரு பாடத்தை படித்தாலும் கவனத்தை சிதறவிடாமல் படிப்பது அவசியம். விளையாடும் போது கவனம் தேவை.

பரிகாரம்: பைரவரை புதன்கிழமை தோறும் வணங்க திருமணத் தடை நீங்கும். செல்வம் சேரும்.
***************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE