மேஷம், ரிஷபம், மிதுனம்; இந்த வார ராசிபலன்; செப்டம்பர் 16 முதல் 22ம் தேதி வரை

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மேஷம்:


கிரகநிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு - பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன் - ரண ருண ஸ்தானத்தில் புதன் (வ), செவ்வாய் - களத்திர ஸ்தானத்தில் சுக்கிரன் - அஷ்டம ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் சனி (வ), குரு (வ) என கிரகநிலை உள்ளது.

இந்த வாரம் நல்ல பலன்களை பெறப் போகிறீர்கள். மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும்.

மனக்கவலை குறையும். எல்லாவகையிலும் சாதகமான பலன் கிடைக்கப் பெறுவீர்கள். சுக்கிரன் சஞ்சாரத்தால் திடீர் செலவு உண்டாகலாம். திட்டமிட்டபடி செல்ல முடியாமல் பயணத்தில் தடங்கல் ஏற்படலாம்.

தொழில் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும் என்ற தன்னம்பிக்கை ஏற்படும். சரக்குகளை அனுப்பும்போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி வரும். அலுவலக வேலைகள் இழுபறியாக இருக்கும்.

குடும்பத்தில் வெளிநபர்களால் ஏதாவது குழப்பம் ஏற்படலாம். சொந்த விஷயங்களுக்கு அடுத்தவர் ஆலோசனைகளைக் கேட்பதை தவிர்ப்பது நல்லது. பெண்களுக்கு அலுவலகத்தில் தேவையில்லாத படபடப்பு ஏற்படலாம்.

மாணவர்கள் கல்வியில் மேன்மை அடைய கூடுதல் கவனத்துடன் படிப்பது அவசியம். கலைத்துறையினர் எந்தக் காரியத்திலும் திட்டமிடுதல் அவசியம். அரசியல்வாதிகள் முடிவெடுக்கும்போது ஆலோசனை அவசியம்.

பரிகாரம்: செவ்வாய்கிழமையில் சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்து தீபம் ஏற்றி வணங்குவது வாழ்வில் முன்னேற்றத்தை தரும்.
----------------------------------------------------


ரிஷபம்:


கிரகநிலை:
ராசியில் ராகு - சுக ஸ்தானத்தில் சூர்யன் - பஞ்சம ஸ்தானத்தில் புதன்(வ), செவ்வாய் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்கிரன் - களத்திர ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் சனி (வ), குரு (வ) என கிரகநிலை உள்ளது.

இந்த வாரம் நல்ல யோகமான பலன்களைப் பெறப் போகிறீர்கள். பணவரத்து அதிகரிக்கும்.

மனதில் ஏதாவது ஒரு கவலை உண்டாகும். சொத்து சம்பந்தமான காரிய அனுகூலம் ஏற்படும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கக் கூடும். தொழில் வியாபாரம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக நடக்கும்.

உத்தியோகத்தில் வேலை பார்க்கும் இடத்தில் பொருட்களை கவனமாக பாதுகாப்பாக வைப்பது நல்லது. குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். வீட்டிற்குத் தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள்.

பெண்களுக்கு காரிய அனுகூலம் உண்டாகும். கலைத்துறையினருக்கு மனதில் ஏதாவது கவலை இருந்து வரும். அரசியல்வாதிகளுக்கு புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். மாணவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படலாம். பாடங்களில் கவனம் செலுத்துவது குறையக் கூடும். நன்கு படிப்பது நல்லது.

பரிகாரம்: வெள்ளிக்கிழமை அன்று நவக்கிரகத்தில் சுக்கிரனுக்கு தீபம் ஏற்றி அர்ச்சனை செய்ய செல்வம் சேரும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும்.
----------------------------------------------------


மிதுனம்:


கிரகநிலை:
தைரிய ஸ்தானத்தில் சூர்யன் - சுகஸ்தானத்தில் புதன்(வ), செவ்வாய் - பஞ்சம ஸ்தானத்தில் சுக்கிரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் சனி (வ), குரு (வ) - அயனசயன போக ஸ்தானத்தில் ராகு என கிரகநிலை உள்ளது.

இந்த வாரம் உங்களுக்கு சாதகமான அமைப்பைக் காட்டுகிறது. வழக்கு சம்பந்தமான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும்.

பயணங்கள் செல்ல நேரிடலாம். மனதிருப்தியுடன் செயலாற்றுவீர்கள். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதன் மூலம் மற்றவர்களிடம் மதிப்பு கூடும். பாராட்டு கிடைக்கும். தொழில் வியாபாரம் முன்னேற்றம் காண புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக செயல்பட்டு வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பார்கள்.

குடும்பத்துடன் விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழ்நிலை வரும். பெண்களுக்கு மனதிருப்தியுடன் காரியங்களைச் செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு புத்திசாதுர்யம் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு புதிய பதவி அல்லது பொறுப்புகள் கிடைக்கும். மாணவர்களுக்கு பாடங்களை கவனமாக படித்து கூடுதல் மதிப்பெண் பெறுவீர்கள். பொறுப்புகள் அதிகரிக்கும்.

பரிகாரம்: புதன்கிழமை அன்று சிவபெருமானுக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்து வணங்க திருமணத் தடை நீங்கும். குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.
----------------------------------------------------

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE