கும்ப ராசி அன்பர்களே! தேவையற்ற பிரச்சினை; எதிலும் நிதானம்; பண வரவில் தாமதம்; செப்டம்பர் மாத பலன்கள் 

By செய்திப்பிரிவு

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்


கும்பம்
(அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்)


கிரகநிலை:
ராசியில் குரு (வ) - சுக ஸ்தானத்தில் ராகு - களத்திர ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் - தொழில் ஸ்தானத்தில் கேது - அயன சயன போக ஸ்தானத்தில் சனி (வ) என கிரகநிலை உள்ளது.

இம்மாதம் 06ம் தேதி சுக்கிர பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இம்மாதம் 07ம் தேதி செவ்வாய் பகவான் அஷ்டம ஆயுள் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இம்மாதம் 13ம் தேதி புத பகவான் அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் வக்ரம் ஆரம்பம்.
இம்மாதம் 14ம் தேதி குரு பகவான் விரய ராசிக்கு மாறுகிறார்.
இம்மாதம் 17ம் தேதி சூர்ய பகவான் அஷ்டம ஆயுள் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இம்மாதம் 27ம் தேதி சனி பகவான் விரய ராசியில் வக்ர நிவர்த்தி அடைகிறார்.

எதிர்காலத்தை மனதில் கொண்டு திட்டமிட்டு செயலாற்றும் கும்ப ராசி அன்பர்களே!

இந்த மாதம் அடுத்தவர்களுக்கு உதவப்போய் அதனால் அவதிப்பட்ட நேரலாம். எனவே கவனமாக இருப்பது நல்லது. வாகனங்களில் செல்லும்போதும் பணிபுரியும் இடத்தில் ஆயுதங்களைக் கையாளும்போதும் கவனம் தேவை. செலவு அதிகரிக்கும். மனதில் இருந்த உற்சாகம் குறையும்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் சற்று விழிப்புடன் இருப்பது நல்லது. பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும்போது கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பார்த்த பணம் கைக்கு வர தாமதம் ஆகலாம்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலைச்சலையும், வேலைப் பளுவையும் சந்திக்க நேரிடும். சிலருக்கு இட மாற்றம் உண்டாகலாம். குடும்பத்தில் திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் கணவன்மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வதும் நல்லது. சகோதரர்களுடன் கருத்து வேற்றுமை உண்டாகலாம். எச்சரிக்கை தேவை.

பெண்கள் அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்யும்போது கவனமாக இருப்பது நல்லது. செலவு அதிகரிக்கும். வீண் கவலை உண்டாகலாம்.
மாணவர்கள் கல்வி பற்றிய கவலையை தவிர்த்து கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்லது. வீண் அலைச்சல் இருக்கும்.

அவிட்டம் 3, 4:
குடும்பத்தில் இருப்பவர்களுடன் ஏதாவது ஒருவகையில் வாக்குவாதம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே சிறுசிறு மனஸ்தாபம் உண்டாகும். சகோதரர்களிடம் கருத்து வேற்றுமை ஏற்படலாம். வெளியூர் பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும்
சதயம்:
அடுத்தவர்களிடம் பேசும்போது யாரைப் பற்றியும் விமர்சிக்காமல் இருப்பது நல்லது. பணவரத்தில் தாமதம் இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் பின்தங்கிய நிலை மாற கூடுதல் கவனத்துடன் அதிக நேரம் ஒதுக்கி பாடங்களைப் படிப்பது அவசியம்.
பூரட்டாதி 1, 2, 3:
பணவரத்து கூடும். ஆன்மிகச் செலவுகள் உண்டாகும். காரியத்தடை, தாமதம் விலகும். ஆனாலும் அந்தக் காரியத்தை செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். அந்நிய மொழி பேசுபவர்களால் உதவி கிடைக்கும். வசிக்கும் இடத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்

பரிகாரம்: ஆஞ்சநேயருக்கு சனிக்கிழமைகளில் வெற்றிலை மாலை சூடி வர காரிய ஸித்தி உண்டாகும்.
சந்திராஷ்டம தினங்கள்: 8, 9
அதிர்ஷ்ட தினங்கள்: 19, 20
~~~~~

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE