கடக ராசி அன்பர்களே!  2021 ஜனவரி மாத ராசிபலன்கள்; திருப்தியான பண வரவு; தைரியம் பிறக்கும்; விட்டுக்கொடுங்கள் 

By செய்திப்பிரிவு

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)

கிரகநிலை:

தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் - லாப ஸ்தானத்தில் ராகு - ராசியில் ஸ்தானத்தில் சந்திரன் - பஞ்சம ஸ்தானத்தில் சுக்கிரன், கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூரியன் - களத்திர ஸ்தானத்தில் புதன், குரு, சனி என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றங்கள்:

06-01-2021 அன்று சுக்கிர பகவான் காலை 07:18 மணிக்கு பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

30-01-2021 அன்று சுக்கிர பகவான் காலை 07:18 மணிக்கு ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்:

எதையும் ஆழமாக யோசித்து திறமையுடன் செய்து முடிக்கும் கடக ராசியினரே!

நீங்கள் குடும்பத்தினரின் மீது அதிக பாசம் வைத்திருப்பவர்கள். இந்த மாதம் பணவரத்து திருப்திகரமாக இருக்கும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களை வெற்றிகரமாகச் செய்வீர்கள். ஆனால் தாமதமான பலனே கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக வந்து சேரும். அடுத்தவருக்கு உதவிகள் செய்யும்போது கவனமாக இருப்பது நல்லது. தைரியம் அதிகரிக்கும்.

தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு வேகமாக இல்லாவிட்டாலும் நிதானமாக இருக்கும். பணவரவு உண்டு. வாடிக்கையாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. நீண்ட நாட்களாக தொழிலில் இருந்து வந்த சுணக்க நிலை மாறும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதையும் ஆலோசித்து செயல்படுவது நன்மை தரும். மேல் அதிகாரிகள் கூறுவதற்கு மாற்று கருத்துகளை கூறாமல் இருப்பது நல்லது. சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

குடும்பத்தில் கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுடன் நிதானமாகப் பேசுவது குடும்ப அமைதியைத் தரும். நண்பர்கள், உறவினர்கள் விலகிச் செல்வது போல் இருக்கும். விட்டுப் பிடிப்பது நல்லது. குழந்தைகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவீர்கள்.

பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். மாற்று கருத்துக்களை மற்றவர்களிடம் கூறாமல் இருப்பது நன்மை தரும்.
கலைத்துறையினருக்கு நீங்கள் மற்றவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதில் தயங்க மாட்டீர்கள். பேச்சுத் திறமை அதிகரிக்கும். எதிர்பாலினத்தவரிடம் பழகும்போது கவனம் தேவை. நண்பர்கள் மூலம் வீண் அலைச்சல் குறையும்.

அரசியல் துறையினருக்கு வீண் அலைச்சல் வேலைப்பளு இருக்கும். மனம் மகிழும் காரியங்கள் நடக்கும். பேச்சுத் திறமையால் காரியங்களை சாதகமாக செய்து முடிப்பீர்கள். பயணங்கள் செல்ல நேரலாம்.

மாணவர்களுக்கு எதையும் ஒருமுறைக்கு இருமுறை ஆலோசித்து செய்வது நன்மை தரும். கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள்.

புனர் பூசம் 4ம் பாதம்:

இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமுடன் பணியாற்றுவது நல்லது. புதிய வேலைக்கு செய்யும் முயற்சிகள் பலன் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை உண்டாகும்.

கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரச்சினைகள் குறையும். குழந்தைகளின் எதிர்கால நலனில் அக்கறை காட்டுவீர்கள். விருந்தினர் வருகை இருக்கும். எந்த ஒரு முடிவையும் எடுக்கும்போது ஒருமுறைக்கு பலமுறை யோசிப்பது நல்லது. மற்றவர்களிடம் பகைமை பாராட்டுவதைத் தவிர்ப்பது நல்லது.

பூசம்:
இந்த மாதம் மாணவர்கள் கல்வி தொடர்பான விஷயங்களில் முடிவு எடுக்கும் போது தீர ஆலோசித்து செயல்படுவது நல்லது. புதிய முயற்சிகளில் தாமதம் ஏற்படலாம். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். புத்திசாதுர்யத்தால் எதையும் செய்து முடிக்க முடியும். அனுபவபூர்வமான அறிவுத்திறன் கை கொடுக்கும். பண வரத்து தாமதப்படும். மற்றவர்களுடன் வீண் வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நன்மைதரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும்.

ஆயில்யம்:
இந்த மாதம் பணவரத்து தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாகப் பழகுவது நல்லது. அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் திடீர் பிரச்சினை தலை தூக்கும். மிகவும் கவனமாக கையாண்டால் அது தீரும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். பிள்ளைகள் உங்கள் ஆலோசனையைக் கேட்காமல் தன்னிச்சையாக முடிவு எடுக்கலாம். உறவினர்கள் நண்பர்களிடம் கவனமாகப் பழகுவது நல்லது.

பரிகாரம்: அம்மனுக்கு பூஜை செய்து விரதம் இருப்பது கஷ்டங்களைப் போக்கும். அம்மன் வழிபாடு செய்யுங்கள். மனக் குழப்பம் நீங்கி தைரியம் உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: 16, 17
அதிர்ஷ்ட தினங்கள்: 9, 10
***********************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE