மிதுன ராசி அன்பர்களே!  2021 ஜனவரி மாத ராசிபலன்கள்; தைரியம் பிறக்கும்; வழக்கில் வெற்றி; வீண் வாதம் வேண்டாம்; எதிலும் வெற்றி! 

By செய்திப்பிரிவு

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)

கிரகநிலை:

லாப ஸ்தானத்தில் செவ்வாய் - அயன சயன போக ஸ்தானத்தில் ராகு - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்கிரன், கேது - களத்திர ஸ்தானத்தில் சூரியன் - அஷ்டம ஸ்தானத்தில் புதன், குரு, சனி என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றங்கள்:

06-01-2021 அன்று சுக்கிர பகவான் காலை 07:18 மணிக்கு ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

30-01-2021 அன்று சுக்கிர பகவான் காலை 07:18 மணிக்கு களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்:

அனுபவத்தையும் திறமையையும் கொண்டு காரியங்களைத் திறம்பட செய்யும் மிதுன ராசியினரே!

நீங்கள் எந்தச் சூழ்நிலையிலும் விவேகத்தை கை விடாதவர்கள். இந்த மாதம் கடிதப் போக்குவரத்து சாதகமான பலன் தரும். அவசர முடிவுகள் எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. மனதில் தைரியம் உண்டாகும். வீண் வாக்குவாதங்களால் பகையை வளர்த்துக் கொள்ளாமல் பார்த்துக் கொள்வது நல்லது. வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். தடைபட்டிருந்த கல்வியை தொடர்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.

தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் சாதுர்யமான பேச்சின் மூலம் தங்களது வியாபாரத்தை லாபகரமாகச் செய்வார்கள். தேவையான பண உதவியும் கிடைக்கும். பங்குதாரர்களிடம் இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிக உழைப்பும் அதற்கேற்ற பலனும் உண்டாகும். எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நன்மை தரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணியிட மாற்றம் கிடைக்கும்.

குடும்பத்தில் கலகலப்பு உண்டாகும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய கவலை ஏற்பட்டு நீங்கும். அக்கம்பக்கத்தினரிடமும் உறவினர்கள், நண்பர்களிடம் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. முயற்சிகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும்.

பெண்களுக்கு மனதில் தைரியம் உண்டாகும். அவசர முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது. வீண் வாக்குவாதத்தை விட்டு நிதானமாக பேசுவது நன்மைகளைத் தரும்.
கலைத்துறையினருக்கு மனதில் தெம்பு உண்டாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும். முயற்சிகள் சாதகமான பலன்கள் தரும். பணவரத்து அதிகரிக்கும். புத்தி சாதுர்யத்தால் எல்லாவற்றையும் சமாளித்து வெற்றி காண்பீர்கள்.

அரசியல் துறையினருக்கு வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நல்லது. மேலிடத்திற்கு நீங்கள் சொல்வதைக் கேட்டு நடக்கவில்லையே என்ற எண்ணம் ஏற்பட்டு நீங்கும். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும்.

மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கூடுதல் உழைப்பு தேவைப்படும். எதிர்பார்ப்புகளை குறைத்து, இருப்பதை வைத்து முன்னேற முயற்சிப்பது நல்லது.

மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்:
இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும். பணியாட்கள் மூலம் நன்மைகள் ஏற்படும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களிடம் நன் மதிப்பைப் பெறுவீர்கள்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் நேர்மையாக சிறப்பாக பணிகளைச் செய்து மேல் அதிகாரிகளிடம் பாராட்டுகள் கிடைக்கப் பெறுவார்கள்.


திருவாதிரை:
இந்த மாதம் உயர்பதவிகளும் கிடைக்கக் கூடும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். எல்லா வகையிலும் நன்மைகள் ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மன வருத்தம் நீங்கி மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். பிள்ளைகள் நீங்கள் கூறியதைக் கேட்டு அதன்படி நடப்பது ஆறுதலைத் தரும். தேவையான உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். தடைபட்ட காரியங்கள் சாதகமாக முடியும். பணவரத்து அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் நீங்கி முன்னேற்றம் காண்பீர்கள். பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் பாராட்டும் கிடைக்கும்.

புனர்பூசம் 1, 2, 3 பாதம்:
இந்த மாதம் எல்லாப் பிரச்சினைகளும் சுமுகமாக முடியும். குடும்பத்தில் அமைதி ஏற்படும். வீண் முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. எதையும் ஆராய்ந்து முடிவுகளை எடுப்பது நல்லது. வேகத்தை குறைத்து விவேகமுடன் செயல்படுவது நன்மைகளைத் தரும். பணவரத்து தாமதப்படும். பெரியோர்களிடம் பகைமை பாராட்டுவதைத் தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் தாமதப்படும். பழைய பாக்கிகள் வசூலாவதில் மெத்தனம் காணப்படும். எந்தவொரு வேலையையும் அலைந்து செய்து முடிக்க வேண்டி இருக்கும்.

பரிகாரம்: புதன்கிழமையில் நவக்கிரகத்தில் புதன் பகவானை நெய்தீபம் ஏற்றி வணங்கி வாருங்கள். எல்லா நன்மைகளும் உண்டாகும். கல்வியில் வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன்
சந்திராஷ்டம தினங்கள்: 14, 15
அதிர்ஷ்ட தினங்கள்: 7, 8
********************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE