மகம் நட்சத்திரக்காரர்களுக்கு நன்மை, தீமை தரும் நட்சத்திரங்கள்; தொழில் செய்ய உகந்த நட்சத்திரங்கள்; 27 நட்சத்திரங்கள்; ஏ டூ இஸட் தகவல்கள் - 29 ; 

By செய்திப்பிரிவு

- ’சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்


வணக்கம் வாசகர்களே.
மகம் நட்சத்திரத்தின் குணாதிசயங்களைப் பார்த்து வருகிறோம்.
இந்த மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்று சீதை, அர்ஜுனன், எமதர்மராஜன் முதலானவர்களையும் அவர்களின் குணாதிசயங்களையும் பார்த்தோம் அல்லவா?
மேலும் மகம் நட்சத்திரத்தில் பிறந்த இன்னொரு முக்கியமானவர் உண்டு! அவர்... சுக்கிர பகவான். நவக்கிரகங்களில் இருக்கும் குரு பகவானும் சுக்கிர பகவானும் ஒரே போல அனைத்துக் கலைகளையும் கற்றவர்கள், குருபகவான் தேவர்களுக்கு குருவாகவும், சுக்கிரன் அசுர குலத்திற்கும் குருவாக இருப்பவர்கள்.

ஆனால் குருபகவானுக்கு தெரியாத வித்தை சுக்கிரனுக்குத் தெரியும்! அதுதான் இறந்தவர்களை மீண்டும் உயிர்ப்பிக்கும் சஞ்ஜீவி ரகசியம். (இதன் காரணமாகவே பாற்கடலை கடைந்து அமிர்தம் எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் தேவர்களுக்கு ஏற்பட்டது) இதனால்தான் இந்த மகம் நட்சத்திரக்கார்ர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டாலும் விரைந்து உடல்நலம் தேறிவிடுவார்கள்.ஆனால் அதேசமயம் “ஓவர் கான்பிடண்ட் உடம்பிற்கு ஆகாது” என்பதையும் மகம் நட்சத்திரக்காரர்கள் உணர வேண்டும்.

சுக்கிரன், மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர் என்பதால் இந்த மகத்தில் பிறந்தவர்களுக்கு பொருளாதாரப் பிரச்சினைகள் எதுவும் இருக்காது. பணத்தேவைகள் உடனுக்குடன் தீரும். அசையும் அசையா சொத்துக்கள் இயல்பாக கிடைக்கும்.

ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால்... இந்த மகம் நட்சத்திரம் வானில் பார்ப்பதற்கு கிரீடம் அமைப்பிலும், ஏர்கலப்பை போன்றும் இருக்கும்.
இந்த கிரீடம் அமைப்பு இருப்பதால்தான் “நாம் எல்லாரோலும் மதிக்கப்பட வேண்டும், புகழப்பட வேண்டும்’ என நினைப்பார்கள். அதேசமயம், அலட்சிய குணம் அதிகமிருக்கும். ஆனால் அதேசமயம் கடும் உழைப்பாளிகள். உழைப்பதற்குத் தயங்காதவர்கள். தான் எடுத்துக்கொண்ட வேலையைத் தவிர வேறு எதிலும் கவனம் செலுத்தாதவர்கள். லட்சியவாதிகள், பிடிவாதக்காரர்கள், தனக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்ற அறிவும் அகந்தையும் உடையவர்கள். எப்போதும், எந்த நிலையிலும், எப்படியான சூழ்நிலையிலும் பிறரிடம் உதவி என்று கேட்காதவர்கள்.

சூழ்நிலை காரணமாக வாழ்க்கையில் தோற்றாலும், நஷ்டப்பட்டாலும் சொந்த முயற்சியில் முன்னேறுபவர்கள், மகம் நட்சத்திரக்காரர்கள். சிறந்த படிப்பாளிகள். ஒரு விஷயத்தை ஒருமுறை பயிற்றுவித்தாலே கற்பூரமாய் கற்றுக்கொள்பவர்கள். மனதில் அச்ச உணர்வு என்பதே இல்லாதவர்கள்.

இவர்களுக்கு பரிபூரணமாக சகல சம்பத்துக்களை, யோகங்களை, நினைத்தவை நினைத்தபடியே நடத்தித் தரக்கூடிய நட்சத்திரங்கள் - பரணி - பூரம் - பூராடம்.


இந்த நட்சத்திரம் வரும் நாட்களில் எடுத்துக்கொள்ளும் எந்த ஒரு விஷயமும் நூறு சதம் நன்மையைத் தரும். பணவரவு, புதிய முயற்சிகள், தொழில் வியாபார விஷயங்கள் என எதுவும் வெற்றி. எதிலும் வெற்றி. எப்போதும் வெற்றிதான்!


இந்த நட்சத்திரத்தில் வாழ்க்கைத்துணை அமைவதும், நண்பர்களைப் பெறுவதும் அளப்பரிய நன்மைகளைத் தரும்.

சொந்த வீடு வாங்கவும், எந்தத் தடையும் இல்லாமல் சொத்துக்கள் கிடைக்கவும், எந்த ஒரு வேலையிலும் ஆதாயம் கிடைக்கவும், பாகப்பிரிவினையில் உங்களுக்கான பங்கு நியாயமாக கிடைக்கவும் உதவும் நட்சத்திரங்கள் - ரோகிணி - அஸ்தம் - திருவோணம்.


இந்த நட்சத்திரம் வரும் நாட்கள்... பத்திரப்பதிவு, ஆபரணங்கள் வாங்குதல், தொழில் வியாபார ஒப்பந்தங்கள் போடவும், சுப காரியங்கள் செய்யவும் உகந்தவை. இந்த நட்சத்திரக்காரர்கள் வாழ்க்கைத்துணையாக அமைவதும், நண்பர்கள் இருப்பதும் மிகுந்த நன்மைகளைத் தரும்.

தொழில் வளர்ச்சிக்காக புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டுமா? கடன் வாங்க நினைக்கிறீர்களா? கடன் அடைக்கவும், எதிரிகளை வீழ்த்த வியூகம் அமைக்கப் போகிறீர்களா? நோய் நீங்க மருந்து உட்கொள்ளப் போகிறீர்களா? சிகிச்சைகள் தொடங்கவும், ஆலய தரிசனம் செய்யவும் முடிவு செய்திருக்கிறீர்களா? அவற்றுக்கு உகந்த நட்சத்திரங்கள் - திருவாதிரை - சுவாதி - சதயம்.


இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களிலும், இந்த நட்சத்திர நண்பர்கள், வாழ்க்கைத்துணையாக அமைவதும் சிறப்பான பலன்களையும் உன்னதமான யோகங்களையும் கிடைக்கும்.


நன்மைகள் தொடர்ந்து கிடைக்கவும், ஆதாயம் தரும் விஷயங்களைச் செய்யவும், வியாபார பேச்சுக்களில் ஈடுபடவும், ஒப்பந்தங்கள் போடவும் சிறந்த நட்சத்திரங்கள் - பூசம் - அனுஷம் - உத்திரட்டாதி.


இந்த நட்சத்திர நாட்களில் மேற்கொள்ளும் எதுவும் முழு நன்மையைத் தரும். வாழ்க்கைத்துணை, நட்புக்கள் இந்த நட்சத்திரக்காரர்களாக அமைவது சிறப்பு.

அதிக நன்மைகள் கிடைக்கவும், இரு மடங்கு ஆதாயம் பெறவும், பயணங்கள் மேற்கொள்ளவும், பயணங்களால் ஆதாயம் பெறவும், வெளிநாடு செல்லும் முயற்சிகளை எடுக்கவும், சுப விஷேசங்கள் செய்யவும் உகந்த நட்சத்திரங்கள் - நட்சத்திர நாட்கள் - ஆயில்யம் - கேட்டை - ரேவதி.
இந்த நட்சத்திர நாட்களில் மேற்கொள்ளும் எதுவும் இரட்டிப்பு நன்மைகளைத் தரும். வீடு கட்டுவது, சொத்துக்கள் பதிவது, கடன்களை முழுமையாக அடைப்பது, மருத்துவ சிகிச்சையிலருந்து வீடு திரும்புவது முதலானவற்றை மேற்கொள்ளலாம்.


மகம் நட்சத்திரக்காரர்கள், பயணங்கள் செய்யக்கூடாத, எந்த சொத்துக்களையும் வாங்கக்கூடாத, வாகனங்கள் வாங்கக்கூடாத, எந்தவிதமான தொழில் வியாபாரங்களும் தொடங்கக்கூடாத, ஒப்பந்தங்கள் போடக்கூடாத, எந்த புது முயற்சியும் தொடங்கக்கூடாத நட்சத்திரங்கள் - நட்சத்திர நாட்கள் - கார்த்திகை - உத்திரம் - உத்திராடம்.


இந்த நட்சத்திர நாட்களில் மேற்கொள்ளும் எதுவும் மகம் நட்சத்திரக்காரர்களுக்கு தோல்வியில்தான் முடியும். வாழ்க்கைத்துணை, நண்பர்களும் இந்த நட்சத்திரக்காரர்களாக இல்லாமல் இருப்பதே நல்லது. அப்படி இருந்தால், துரோகத்தால் வீழ்த்தப்படுவீர்கள்.

பிறருக்கு நன்மையும் உங்களுக்கு எந்தப் பயனும் கிடைக்காத, குலதெய்வ வழிபாடு செய்ய, தத்து எடுக்க, தொழில் வியாபார பேச்சுவார்த்தைகள், ஒப்பந்தங்கள் செய்யக்கூடாத நட்சத்திரங்கள் -நட்சத்திர நாட்கள் - மிருகசீரிடம் - சித்திரை - அவிட்டம்.


இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் மேற்கொள்ளும் எதுவும் மகம் நட்சத்திரக்காரர்களைப் பொறுத்தவரை, பிறருக்கு நன்மையாகவும், உங்களுக்கு எந்தப் பலனும் கிடைக்காமலும் போகும். நண்பர்கள், வாழ்க்கைத்துணை அமைந்தால் அவர்களால் உதவியும் இல்லை, உபத்திரவமும் இருக்காது!


அதிக துயரங்களை தரக்கூடிய, நிம்மதியை இழக்க வைக்கிற, சம்பந்தமேயில்லாமல் பிரச்சினைகளில் சிக்கவைக்கக்கூடிய, வழக்குகள், சிறை என சிக்க வைக்கக்கூடிய நட்சத்திரங்கள் - புனர்பூசம் - விசாகம் - பூரட்டாதி.


இந்த நட்சத்திர நாட்களில் மேற்கொள்ளும் எதுவும் மகம் நட்சத்திரக்காரர்களுக்கு எதிராக திரும்பும். உதவி செய்யப்போய் உபத்திரவத்தில் முடியும். வாழ்க்கைத்துணை அமைந்தால் நித்தம் நித்தம் ரண வேதனையை அனுபவிக்க வேண்டி வரும். நண்பர்களாக அமைந்தால் வேண்டாத சிக்கல்களில் சிக்கி சீரழிய வேண்டியது வரும்.

பொதுவாக, மகம் நட்சத்திரக்காரர்கள் எந்தப் பிரச்சினை வந்தாலும், அதிலிருந்து எப்படியும் தப்பிவிடுவார்கள். உதவிகள் கேட்காமலேயே கிடைக்கும். ஒருவேளை சிக்கலில் சிக்கினால் மிகத் திறமையாக, அந்த சிக்கலை உண்டாக்கியவர்கள் மீதே திருப்பிவிடக்கூடிய வல்லமை பெற்றவர்கள்.

சரி... மகம் நட்சத்திரத்தின் நான்கு பாதங்களுக்குமான பலன்களை அடுத்த பதிவில் பார்ப்போம்.


- வளரும்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE