27 நட்சத்திரங்கள் - ஏ டூ இஸட் தகவல்கள் 21 - எந்தத் தொழில் புனர்பூசக்காரர்கள் செட்டாகும்?  - ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

By செய்திப்பிரிவு

27 நட்சத்திரங்கள் - ஏ டூ இஸட் தகவல்கள் 21 - எந்தத் தொழில் புனர்பூசக்காரர்கள் செட்டாகும்?
- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

வணக்கம் வாசகர்களே.
புனர்பூச நட்சத்திரம் பற்றிய தகவல்களைப் பார்த்து வருகிறோம்.
இப்போது, இந்தப் பதிவில் ஒவ்வொரு புனர்பூச நட்சத்திரத்தின் ஒவ்வொரு பாதங்களையும் பார்ப்போம்.

புனர்பூசம் 1ம் பாதம்-

புனர்பூச நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் பிறந்தவர்கள், திறமைசாலிகள். எந்த வேலையையும் சுறுசுறுப்பாக செய்து முடிப்பவர்கள். ஒரு பிரச்சினை என வந்தால் நாசூக்காக தப்பிவிடுபவர்கள். கல்வியில் இடர்பாடுகள் வந்திருக்கும். அந்தத் தடைகளை எல்லாம் தாண்டி வெற்றி பெற்றிருப்பார்கள்.

கட்டிட என்ஜினீயர்கள், மருத்துவர்கள், அதிகாரப் பதவிகளில் இருப்பவர்கள் (காவல் மற்றும் ராணுவம்), மருந்து நிறுவனம், ஆயுதங்கள் தயாரிப்பு, ரசாயன ஆராய்ச்சி, தொழில்துறை சார்ந்த ஆலோசகர், வழக்கறிஞர், நீதிபதி, அரசியல் ஆலோசகர், அமைச்சர், விளையாட்டுத் துறை, விளையாட்டுப் பயிற்சியாளர் போன்ற துறைகளில் இருப்பார்கள்.

காரமான உணவுகள் இவர்களுக்கு மிகவும் பிடிக்கும். அதிலும் சூடான உணவுகளையே உண்பவர்கள். இதன் காரணமாகவே அல்சர், உடல்சூடு, கொப்புளம், அடிக்கடி காய்ச்சல், மலச்சிக்கல், தோல் மற்றும் சுவாச அலர்ஜி போன்ற பிரச்சினைகளுக்கு ஆளாவார்கள்.

இவர்களுக்கு நண்பர்களாக இருப்பது கஷ்டம். ஒரே காரணம், தன் பிரச்சினைகளை மட்டுமே சொல்லி புலம்புவார்கள். இது மற்றவர்களுக்கு எரிச்சலைத் தரும். இவர்களும் இந்த வழக்கத்தை விடவும் மாட்டார்கள். இவர்கள் கடன் வாங்கக்கூடாது. அதிலும் நண்பர்களிடம் அறவே கடன் கொடுப்பது கடன் வாங்குவது இந்த இரண்டும் கூடவேகூடாது.

அதேபோல, கூட்டுத்தொழில் செய்யக்கூடாது, தன் மனைவியை/கணவரை கூட கூட்டு சேர்க்கக் கூடாது. பொதுவாக சுயதொழில் பெரிய அளவில் இவர்களுக்கு அமையாது. அமைந்தாலும் நாளொரு பிரச்சினை இருந்து கொண்டே இருக்கும். முடிந்தவரை வேலைக்குச் செல்வதே சிறந்தது.

இவர்களின் இறைவன்- நின்ற கோலத்தில் இருக்கும் பெருமாள்.

விருட்சம்- மூங்கில் மரம்(சென்ற பதிவில் இதைப்பற்றி நிறைய தகவல் தந்துள்ளேன்)

வண்ணம்- இளம் பச்சை

திசை- கிழக்கு

***********************************
புனர்பூசம் 2ம் பாதம்-

நேர்த்தியானவர்கள். வசீகரமானவர்கள். பேச்சாலேயே பலரையும் கவர்பவர்கள். வசதியும் இருக்கும். ஆடம்பரச் செலவுகளும் இருக்கும். சேமிப்பு என்ற ஒன்றை அறிந்திருக்கவே மாட்டார்கள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகிவிடும்.

கலைத்துறையில் ஆர்வம் இருக்கும். கதாசிரியர், வசனகர்த்தா, இயக்குநர் போன்ற பணிகள் சிறப்பாக இருக்கும். எழுத்தாளர், புதிய கருத்துக்கள் உருவாக்குபவர் என இருப்பார்கள்.

வங்கிப்ணியாளர், காசாளர், ஆடை வடிவமைப்பு, நகைகள் உற்பத்தி, வெள்ளி ஆபரணங்கள் தயாரித்தல், சிறுவர் சிறுமியர் தொடர்பான பொருட்கள் தயாரித்தல் மற்றும் விற்பனை, குழந்தைகள் காப்பகம், பிளே ஸ்கூல், பட்டிமன்றப் பேச்சாளர், நிதி நிர்வாகம் போன்ற துறைகளில் வெற்றி காண்பார்கள்.

சொந்தத் தொழில், ஓரளவு மட்டுமே கைகொடுக்கும். இவர்களுக்கும் கூட்டுத்தொழில் சரிவராது. , இவர்கள் கூட்டாளிகளால் எளிதில் ஏமாற்றம் அடைவார்கள்.

சுவையான உணவுகள் மட்டுமே உண்பவர்கள். இனிப்பு பிரியர்கள், காது மூக்கு தொண்டை தொடர்பான பிரச்சினைகள் வரும். இவர்களின் மிகப்பெரிய கவலை... தாம்பத்தியம் தொடர்பான சந்தேகங்கள் இருந்து கொண்டே இருப்பதுதான்.

இவர்களின் இறைவன்- மகாவிஷ்ணு

விருட்சம்- மலைவேம்பு மரம்

வண்ணம் - பச்சை, மற்றும் இள நீலம்

திசை - தென் மேற்கு
***************************************************************************


புனர்பூசம் 3ம் பாதம்-

இவர்களுக்கு தெரிந்ததெல்லாம் ஒன்றேஒன்றுதான்... அது மகிழ்ச்சி! மகிழ்ச்சி மட்டுமே! தானும் தன்னை சுற்றி உள்ளவர்களையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கடிப்பார்கள். கலகலப்பு இவர்களின் ரத்தத்தில் ஊறிய ஒன்றாகும்.

சிறந்த பேச்சு, நகைச்சுவை, கலை மற்றும் ஊடக ஆர்வம், பத்திரிக்கை பணி, நிருபர், கற்பனை கலந்த செய்திகள், கவிதை மற்றும் பாடல் எழுதும் திறன். எழுத்தாளர்கள், தகவல் தொழில்நுட்ப பணி, மனிதவள மேம்பாடு, குழந்தைகள் நல மருத்துவர், சித்த மருத்துவர், இயற்கை வைத்தியம், ஜோதிடம், ஆன்மிக ஈடுபாடு, பள்ளி நிர்வாகம், பயிற்சி பள்ளிகள், நடன நாட்டிய பள்ளிகள், ஹாஸ்டல் வார்டன், பெண்கள் தங்கும் விடுதி, குழந்தைகள் காப்பகம், மன நல மருத்துவம் போன்ற துறைகளில் இருப்பார்கள்.

சொந்த தொழில் ஓரளவு கைகொடுக்கும். கூட்டுத்தொழில் ஆகாது. ஏற்றுமதி இறக்குமதி தொழில், வெளிநாட்டு நாணயம் மாற்றுதல், வெளிநாட்டு பயண ஏற்பாடு, சுற்றுலா அமைப்பு திரைப்பட தயாரிப்பு போன்றவை அமையும்.

அசைவ உணவு விருப்பம் இருந்தாலும், சைவ உணவு விருப்பம் அதிகமிருக்கும். எதையும் அளவோடு உண்பார்கள். தன் உடல் பராமரிப்பதில் கவனமாக இருப்பார்கள். தோல் தொடர்பான வியாதிகள், நரம்பு தொடர்பான பிரச்சினைகள் அடிக்கடி வரும்.

இறைவன்- மகாவிஷ்ணு

விருட்சம்- அடப்ப மரம்

வண்ணம்- பச்சை

திசை- மேற்கு
****************************************************************


புனர்பூசம் 4ம் பாதம்-

அளவற்ற கருணைக்கு சொந்தக்காரர்கள். அன்பாலேயே அனைவரையும் கவர்பவர்கள்.
இரக்க குணம் அதிகம் இருக்கும். இந்த குணாதியங்களினாலேயே ஏமாற்றங்களையும் சந்திப்பார்கள். எதை சொன்னாலும் நம்புவார்கள்.
இப்படி நம்புவதாலேயே தன் சேமிப்புகளை இழப்பார்கள். குடும்ப பாசம் அதிகமுடையவர்கள். சகோதரர்களுக்கு விட்டுத்தருபவர்கள். ஆயிரமாயிரம் வசதிகள் இருந்தாலும் எளிமை விரும்பிகளாக இருப்பவர்கள்.

கலைத்துறை, தகவல் தொழில்நுட்ப துறை, கல்வித்துறை, நூலகர், ஆசிரியர், ஊடகத்துறை, பத்திரிக்கை, தூதரகப்பணி, அயல்நாடுகளில் பணி, கலை மற்றும் பண்பாட்டுத்துறை, கப்பல் படை, கப்பல் பணி, கடல் ஆராய்ச்சி, மீன்வளம், முதியோர் இல்லம், மருத்துவ முகாம் அமைத்து சேவை, திருமண தகவல் மையம், திருமணத் தரகர், விழா அமைப்பாளர், குழு ஒருங்கிணைப்பாளர், விற்பனை பிரதிநிதி, மருத்துவர், மருந்துக்கடை, ஆசிரியர், கல்லூரி விரிவுரையாளர் போன்ற துறைகளில் இருப்பார்கள்.

சொந்தத்தொழில் என பார்த்தால் வெளிநாடுகளுக்கு வேலைக்கு ஆட்கள் அனுப்புதல், பயண ஏற்பாட்டாளர், வெளிநாட்டு பயண அமைப்பாளர், கப்பல் மற்றும் விமான டிக்கெட் ஏஜன்ட், கப்பல் கட்டுமான பணி, மீன்பிடி தொழில், மீன்கள் ஏற்றுமதி, ஷிப்பிங் கார்ப்பரேஷன், காய்கறி வியாபாரம், உணவகங்கள், திரவம் தொடர்பான தொழில், நில வியாபாரம், மனை பிரித்து விற்பனை, மொத்த தரகர் போன்ற தொழில்கள் அமையும்.

உணவுகளில் எதுவும் பாகுபாடு பார்க்காதவர், குளிர்ச்சியான உணவுகளில் விருப்பம் இருக்கும். ஆரோக்கியத்தில் அடிக்கடி சளி, இருமல், தொண்டைக்கட்டு, நுரையீரல் பாதிப்பு, சுவாசக்கோளாறு, போன்ற பிரச்சினைகள் வரும்.

இறைவன்- சயன கோலத்தில் இருக்கும் பெருமாள்.

விருட்சம்- நெல்லி மரம் மற்றும் மஞ்சள் நிற மூங்கில்.

வண்ணம்- இளம் பச்சை

திசை- வடக்கு, வடமேற்கு

அடுத்த பதிவில் குருவின் நட்சத்திரம்... அமிர்தம் இருக்கும் குடம் என்னும் ‘பூசம்’ நட்சத்திரம் பற்றி பார்ப்போம்!
- வளரும்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE