‘2ஆவது அத்தியாயம்’ - துலாம் ராசியினருக்கான 2024 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

By Guest Author

துலாம் பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த தாயின் அருமை பெருமைகளை அறிந்த நீங்கள், தாய்நாட்டையும் நேசிப்பீர்கள். உடுத்தும் உடையையும், உள்ளிருக்கும் மனதையும் வெள்ளையாக வைத்துக் கொள்ளும் நீங்கள் யாருக்கும் தீங்கு நினைக்கமாட்டீர்கள்.

உங்கள் ராசிக்கு 11-ம் வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் அதிரடி மாற்றங்கள் உண்டாகும். முடங்கிக் கிடந்த நீங்கள் முழு மூச்சுடன் பாடுபட்டு முன்னேறுவீர்கள். அடிப்படை வசதிகள் பெருகும். எதிர்பாராத பணவரவு உண்டு. பிரபலங்களின் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். இழுபறியாக இருந்த வேலைகள் விரைந்து முடியும். புதிதாக நிலம், வீடு வாங்குவீர்கள். மனக்குழப்பம் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். 30.4.2024 வரை உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் குரு நிற்பதால் வர வேண்டிய பணம் கைக்கு வரும். கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பு கிடைக்கும். பழைய சிக்கல்களை பேசி தீர்ப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். வசதி வாய்ப்புகள் இருந்தும் வீட்டில் விளையாட ஒரு குழந்தை இல்லையே என தவித்த பெற்றோருக்கு அழகான வாரிசு உருவாகும். பிள்ளைகளால் சமூகத்தில் மதிக்கப்படுவீர்கள். தடைபட்ட கல்யாணப் பேச்சு வார்த்தை கூடி வரும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். நிலுவையில் இருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வங்கிக் கடன் கிடைத்து புது வீட்டை கட்டி முடித்து குடிபுகுவீர்கள். எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மூத்த சகோதரிக்கு திருமணம் நிச்சயமாகும். புது வேலை கிடைக்கும். தாய்வழியில் அனுகூலம் உண்டாகும். அரசு காரியங்கள் விரைந்து முடியும்.

1.5.2024 முதல் வருடம் முடியும் வரை குருபகவான் 8-ம் வீட்டில் மறைவதால் கணவன் -மனைவிக்குள் வீண் சந்தேகம் வரும். திடீர் செலவுகள் வந்து போகும். ஒரே நேரத்தில் இரண்டு மூன்று வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். குடும்பத்தில் வரும் சின்ன சின்ன பிரச்சினைகளை எல்லாம் பெரிதாக்க வேண்டாம். திடீர் பயணங்களும், அலைச்சல்களும் வந்துப் போகும். அரசாங்க அதிகாரிகள், வி.ஐ.பிகளுடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். சித்தர் பீடங்களுக்கு மறவாமல் செல்லுங்கள். குலதெய்வ கோயிலை புதுப்பிப்பீர்கள். எதிர்பார்த்த அயல்நாட்டு பயணம் தாமதமாகி முடியும். வழக்கை நிதானமாக கையாளுங்கள். ரத்த அழுத்தம், சளித் தொந்தரவு, இனம் தெரியாத கவலைகள் வந்து போகும். மற்றவர்களை நம்பி முக்கிய முடிவுகள் எதுவும் எடுக்காதீர்கள். கர்ப்பிணிகள் கவனமாக இருப்பது நல்லது. முக்கிய பத்திரங்களில் கையெழுத்திடும் போது ஒருமுறைக்கு பல முறை படித்துப் பார்த்து கையெழுத்திடுங்கள். அண்டை - அயலாருடன் அளவாகப் பழகுங்கள். நயமாகப் பேசுபவர்களை நம்பாதீர்கள்.

இந்த வருடம் தொடக்கம் முதல் வருடம் முடிய உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் ராகு அமர்வதால் பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேர்வீர்கள். தாம்பத்யம் இனிக்கும். தடைபட்ட கல்யாணம் நல்லவிதத்தில் முடியும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். கேது உங்கள் ராசியை விட்டு விலகுவதால் நோய் விலகும். எதிலும் ஆர்வம் பிறக்கும். தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். குடும்பத்தில் மற்றவர்கள் மீதிருந்த சந்தேகங்கள் நீங்கும். புண்ணிய தலங்கள் செல்வீர்கள். கௌரவப் பதவிகள் கிடைக்கும்.

இந்த ஆண்டு முழுவதும் சனி பகவான் 5-ம் வீட்டில் தொடர்வதால் பிள்ளைகள் உங்களைப் புரிந்துக் கொள்ளாமல் பேசுவார்கள். உயர் கல்வி, உத்தியோகத்தின் பொருட்டு பிள்ளைகள் உங்களைப் பிரிவார்கள். தாய்மாமன் வகையில் செலவுகள் இருக்கும். சின்னச் சின்ன மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். குலதெய்வக் கோயிலுக்கு மறக்காமல் சென்று வாருங்கள்.

வியாபாரிகளே! உங்களுக்கு பின்னால் தொழில் தொடங்கியவர்கள் கூட முன்னேற்றமடைந்தார்களே! வட்டிக்கு வாங்கி கடையை விரிவுபடுத்தி நட்டப்பட்டீர்களே! இனி உங்களின் மாறுபட்ட அணுகுமுறையால் லாபமீட்டுவீர்கள். ஜனவரி, ஜூன், ஜூலை மாதங்களில் லாபம் அதிகரிக்கும். ஆகஸ்ட் மாதத்தில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வேலையாட்களின் தொந்தரவு குறையும். வாடிக்கையாளர்களை கவர புது சலுகைகளை அறிவிப்பீர்கள். கெமிக்கல், கமிஷன், வாகன உதிரி பாகங்களால் லாபமடைவீர்கள். கூட்டுத்தொழிலில் பிரச்சினைகள் ஓயும். பங்குதாரர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

உத்தியோகஸ்தர்களே! ஓடி ஓடி வேலை பார்த்தும் கெட்டப் பெயர்தானே கிடைத்தது! இனி அந்த அவலநிலை மாறும். மேலதிகாரிக்கு ஆலோசனை வழங்கும் அளவுக்கு நெருக்கமாவீர்கள். ஜூன், ஜூலை மாதங்களில் பதவி உயர்வு, சம்பள உயர்வு தடையில்லாமல் கிடைக்கும். சக ஊழியர்களுடன் இருந்த பனிப்போர் நீங்கும். கேட்ட இடத்துக்கு மாற்றல் வாங்கிக் கொண்டு வருவீர்கள்.

முனகிக் கொண்டிருந்த உங்களை இந்தப் புத்தாண்டு முழக்கமிட வைப்பதுடன் கூடாபழக்க வழக்கங்களிலிருந்து உங்களை விடுவிப்பதாகவும், வாழ்வின் இரண்டாவது அத்தியாயத்தை தொடங்குவதாகவும் அமையும்.

பரிகாரம்: திருவண்ணாமலை மாவட்டம், களம்பூர் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீவீரஆஞ்சநேயரை சென்று வணங்குங்கள். துப்புரவு பணியாளருக்கு உதவுங்கள். ஏற்றம் உண்டாகும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE