கடகம் எடுத்தோம் கவிழ்த்தோம் என்றில்லாது சந்தர்ப்ப சூழ்நிலையை உணர்ந்து சமயோஜித புத்தியுடன் பேசும் நீங்கள் அடங்கி எழுபவர்கள். தும்பைப் பூப்போல சிரிப்பு, துடிப்பான செயல்திறனும் கொண்ட நீங்கள், நம்பி வந்தவர்களை ஒருபோதும் கை விட மாட்டீர்கள்.
உங்கள் ராசிக்கு தன வீடான 2-ம் வீட்டில் இந்த புத்தாண்டு பிறப்பதால் சோர்ந்து முடங்கி போயிருந்த உங்கள் உள்மனதில் தன்னம்பிக்கை பிறக்கும். புதிய திட்டங்கள் நிறைவேறும். ஒத்து வராத, உதவாத, உண்மையில்லாத உறவுகளை ஒதுக்கித் தள்ளுவீர்கள். புதியவர்கள் அறிமுகமாவார்கள். 30.4.2024 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 10-வது வீட்டில் தொடர்வதால் அதுவரை வேலைச்சுமை அதிகமாக இருக்கும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.
சில காரியங்களை போராடி முடிக்க வேண்டி வரும். பிரபலங்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளுங்கள். பழைய கடன் பிரச்சினைகள் அவ்வப்போது மனசை வாட்டும். ஊர் பொது விவகாரங்களில் உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்வீர்கள். உத்தியோகத்திலும் மறைமுக எதிர்ப்புகளும், இடமாற்றங்களும் வரக்கூடும். எனவே அலுவலகத்தில் அதிக பேச்சை தவிர்ப்பது நல்லது.
1.5.2024 முதல் வருடம் முடியும் வரை குருபகவான் லாப வீட்டில் அமர்வதால் எதிர்பாராத திடீர் பணவரவு உண்டு. ஏதோ ஒன்றை இழந்ததைப் போல இருந்தீர்களே! அந்த நிலை மாறி உற்சாகம் அடைவீர்கள். தீவிரமாக வேலைத் தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல வேலைக் கிடைக்கும். தற்காலப் பணியில் இருப்பவர்கள் நிரந்தரமாக்கப்படுவீர்கள். மூத்த சகோதரர் பகையை மறந்து வலிய வந்து பேசுவார்.
அடகிலிருந்த நகையை மீட்பீர்கள். சித்தர்கள், மகான்களின் ஆசி கிட்டும். மருத்துவ சிகிச்சைக்குப் பின்னும் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லையே என வருந்தினீர்களே! இந்த வருடத்தில் வாரிசு உருவாகும். மகனின் திருமணத்தை விமர்சையாக நடத்துவீர்கள். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்பீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். வங்கிக் கடனில் ஒரு பகுதியை தீர்ப்பீர்கள். புது வீட்டில் குடி புகுவீர்கள்.
ராகு இந்த வருடம் முழுவதும் 9-ம் வீட்டில் அமர்வதால் வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். தந்தையாரின் உடல் நிலை பாதிக்கும். யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். திடீர் பயணங்கள் அதிகரிக்கும்.
கேது 3-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். தாயாரின் உடல் நிலை சீராகும். விலை உயர்ந்த ஆபரணங்கள், ரத்தினங்கள் வாங்குவீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்கள், தொழிலதிபர்கள் உதவுவார்கள். பழைய வீட்டை நல்ல விலைக்கு விற்று புது இடம் வாங்குவீர்கள்.
வருடம் முழுவதும் அஷ்டமத்துச் சனி தொடர்வதால் முன்கோபம், பதட்டம், சிறு சிறு ஏமாற்றம், வீண் பழி வந்து செல்லும். மனதில் இனம்புரியாத பயம் வந்துப் போகும். முன்யோசனை இல்லாமல் முக்கிய ஆவணங்களில் கையெழுத்திட வேண்டாம். அரசு காரியங்கள் இழுபறியாகும். யோகா, தியானத்தில் ஈடுபடுவது நல்லது.
வியாபாரிகளே! சந்தை நிலவரம் குறித்து முழுமையான அறிவு கிடைக்கும். உணவு, கெமிக்கல், ஏற்றுமதி - இறக்குமதி, மர வகைகளால் அதிக ஆதாயமடைவீர்கள். ஆர்வமுள்ள வேலையாட்கள் அமைவார்கள். கடையை விரிவுப்படுத்தி கட்டுவீர்கள். ஜனவரி, மே, ஜூன் மாதங்களில் வியாபாரம் சூடு பிடிக்கும். புது கிளைகள் தொடங்குவீர்கள். வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிக்கும். புது ஏஜென்சி எடுப்பீர்கள்.
உத்தியோகஸ்தர்களே! அதிகாரிகள் மனம் விட்டுப் பேசுவார்கள். பெரிய பதவியில் அமர்த்தப்படுவீர்கள். மூத்த அதிகாரி அடிக்கடி விடுப்பில் செல்வதால் அந்தப் பதவிக்குரிய பணிகளையும் திறம்பட முடித்து எல்லோரையும் வியக்க வைப்பீர்கள். அரசு நிறுவனங்களில் பணியாற்றும் சிலர் விருப்ப ஓய்வு கொடுத்து விட்டு தனியார் நிறுவனங்களுக்கு தாவுவீர்கள்.
இந்தப் புத்தாண்டு குரு பகவானின் ஆதரவால் சாதிக்கும் ஆண்டாக அமையும்.
பரிகாரம்: கிருஷ்ணகிரி மாவட்டம், கல்லுக்குறிக்கையில் வீற்றிருக்கும் கால பைரவரை சென்று வணங்குங்கள். வாய்ப் பேச இயலாதவர்களுக்கு உதவுங்கள்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்