மீனம் ராசியினருக்கான ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் | 30.10.2023 - 19.05.2025

By Guest Author

பூமிபோல பொறுமையும், சகிப்புத்தன்மையும் உடைய நீங்கள், காரண காரியமில்லாமல் எதையும் செய்ய மாட்டீர்கள். கொடுத்துச் சிவந்த கைகளுடைய நீங்கள், பிறர் உழைப்பில் வாழமாட்டீர்கள். எங்கும், எதிலும் புதுமையை புகுத்தும் நீங்கள், மனசாட்சிக்கு மாறாக நடந்து கொள்ளாதவர்கள். மற்றவர்களின் தேவையறிந்து உதவும் குணமுடைய நீங்கள், எல்லையில்லா அன்பு கொண்டவர்கள்.

ராகுவின் பலன்கள்: இதுவரை உங்கள் ராசிக்கு இரண்டாவது வீட்டில் உட்கார்ந்து கொண்டு மனப் போராட்டங்களையும், வீண் அலைச்சலையும், காரியத் தடைகளையும் கொடுத்து வந்த ராகு பகவான் இப்போது உங்கள் ராசிக்குள்ளேயே வந்து அமர்வதால் படபடப்பான உங்கள் பேச்சில் இனி முதிர்ச்சி தெரியும். பிள்ளைகளின் உடல்நிலை சீராகும். அவர்களின் வருங்காலத்தை மனதில் கொண்டு முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உங்களின் விருப்பத்துக்காக, அவர்கள் விரும்பாத பாடத்தில் சேரும்படி வற்புறுத்தாதீர்கள். மகளுக்கு, நல்ல இடத்தில் வரன் அமையும். பணவரவு அதிகரிக்கும்.

ராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: புதனின் ரேவதி நட்சத்திரத்தில் 30.10.2023 முதல் 6.7.2024 வரை ராகுபகவான் செல்வதால் வேலைச் சுமை இருக்கும். புதிய வாகனம் வாங்குவீர்கள். இடவசதி உள்ள வீட்டுக்கு மாறுவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். போட்டிகளில் ஜெயிப்பீர்கள். விஐபிகளின் ஆதரவான பேச்சால் உற்சாகமடைவீர்கள். சனியின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 6.7.2024 முதல் 15.3.2025 வரை ராகு பகவான் செல்வதால் இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும். குரு பகவானின் பூரட்டாதி நட்சத்திரத்தில் 15.3.2025 முதல் 19.5.2025 வரை ராகு பகவான் சஞ்சாரம் செய்வதால் செல்வாக்கு கூடும். பணப்புழக்கம் உண்டு. பெரிய பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

பழைய கடன் ஒன்று தீரும். வீண்பகை, மனக்கசப்புகள் வரும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். அயல்நாட்டுப் பயணங்கள் தேடி வரும். அரசியல்வாதிகள் தலைமையை விமர்சித்து பேசுவதை தவிர்ப்பது நல்லது. உட்கட்சி பூசலில் தலையிடாமல் இருக்கப் பாருங்கள். வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை போட்டு நஷ்டப்படாதீர்கள். இருப்பதை வைத்து லாபம் சம்பாதிக்கப் பாருங்கள். போட்டியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். முக்கிய வேலைகளை நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது.

கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களை விட்டுப்பிடிக்கப் பாருங்கள். புது ஆர்டர்கள், ஏஜென்சிகளை போராடி பெறுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமை வெளிப்படும். தடைபட்ட உரிமைகளும், சலுகைகளும் உடனே கிடைக்கும். மூத்த அதிகாரிகளின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்ளும் அளவுக்கு நெருக்கமாவீர்கள். கணினி துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். கலைத் துறையினருக்கு பரிசு, பாராட்டுகள் குவியும். சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள்.

கேதுவின் பலன்கள்: இதுவரை உங்கள் ராசிக்கு எட்டில் உட்கார்ந்து கொண்டு நிம்மதி இல்லாமலும், சரியான தூக்கமில்லாமலும் துரத்தியடித்த கேது பகவான் இப்போது ராசிக்கு ஏழாவது வீட்டில் அடியெடுத்து வைப்பதால் உங்கள் ஆழ்மனதில் இருந்த பயம் விலகும். எதிர்ப்புகள் அடங்கும். குறை கூறியவர்கள் புகழ்ந்து பேசுவார்கள். உங்களிடம் மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பார்கள். சகோதரியின் திருமணத்தை கோலாகலமாக நடத்துவீர்கள். அந்தரங்க விஷயங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

கேது பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 30.10.2023 முதல் 4.3.2024 வரை கேது பகவான் செல்வதால் திடீர் யோகம் உண்டாகும். பணவரவு உண்டு. சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் 4.3.2024 முதல் 8.11.2024 வரை கேது செல்வதால் குழந்தை பாக்கியம் உண்டு. பூர்விக சொத்து கைக்கு வரும். முடிந்து வைத்திருந்த காணிக்கையை செலுத்தி நேர்த்திக் கடனை முடிப்பீர்கள். சொத்து வாங்குவீர்கள்.

சூரியனின் உத்திரம் நட்சத்திரத்தில் 8.11.2024 முதல் 19.5.2025 வரை கேது செல்வதால் நீண்ட நாள்களாக இருந்த முதுகு வலி, கழுத்து வலி, பல் வலி வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலர் உங்களை வந்து சந்திப்பார்கள். மாணவ - மாணவிகளுக்கு நினைவாற்றல் கூடும். விளையாட்டு, இலக்கியப் போட்டிகளில் பதக்கம், பரிசு கிடைக்கும்.

பெண்களுக்கு நல்ல பலன்கள் ஏற்படும். மனதில் தெளிவு பிறக்கும். தியானத்தில் ஈடுபடுவீர்கள். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். 7-ம் வீட்டில் கேது அமர்வதால் வியாபாரத்தில் போட்ட முதலை எடுப்பதற்கே பல போராட்டங்களை சந்திக்க வேண்டி வரும். வேலையாட்களிடம் தொழில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்தியோகத்தில் பதவி உயரும். மேலதிகாரியை பகைத்துக் கொள்ள வேண்டாம். இந்த ராகு - கேது மாற்றம் பிரச்சினைகள், சிக்கல்களை குறைப்பதுடன், கவுரவம் பார்க்காமல் விட்டுக் கொடுப்பதால் வெற்றி பெற வைக்கும்.

பரிகாரம்: நாகப்பட்டினத்தில் ஸ்ரீ ஆதிசேஷனின் பூஜையில் மகிழ்ந்து அருள்பாலித்த ஸ்ரீ காயாரோகணேஸ்வரரையும், ஸ்ரீ நீலாயதாட்சி அம்மனையும் வழிபடுங்கள். இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள். நிம்மதியுண்டாகும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE