தனுசு ராசியினருக்கான ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் | 30.10.2023 - 19.05.2025

By Guest Author

நெருக்கடிகள் வந்தாலும் நேர்வழியில் செல்லும் நீங்கள், பணம், பட்டம், பதவிக்கெல்லாம் பணியமாட்டீர்கள். ஏளனமாக எடுத்தெறிந்து உங்களைப் பேசினாலும், எரிச்சல் அடையாமல் எதார்த்தமாக இருப்பீர்கள். மனசாட்சிப்படி நடக்கும் நீங்கள், பெற்ற தாயையும், பிறந்த மண்ணையும் முழுமையாக நேசிப்பவர்கள்.

ராகுவின் பலன்கள்: இதுவரை உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் அமர்ந்து இழப்பு, ஏமாற்றம், விரக்தி என நாலாப்புறமும் வாட்டி வதைத்த ராகு பகவான், இப்போது ராசிக்கு நான்காவது வீட்டில் வந்தமர்வதால் இனி மன நிம்மதியை தருவார். பாதியிலேயே நின்று போன வேலைகளையெல்லாம் இனி பக்குவமாய் பேசி முடிப்பீர்கள். நண்பர்கள், உறவினர்களுடன் சுமுக உறவு ஏற்படும். வீட்டில் அமைதி திரும்பும். கணவன் - மனைவிக்குள் இருந்து வந்த கசப்புணர்வு நீங்கும்.

வங்கிக் கடன் தீரும். பூர்விக சொத்து சிக்கல்கள் முடிவுக்கு வரும். பிரிந்திருந்த சகோதரர்கள் ஒன்று சேருவீர்கள். நிலுவையிலிருந்த வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். தாயாருக்கு மருத்துவச் செலவு அதிகரிக்கும். ரத்த அழுத்தம், நரம்புக் கோளாறு வரும். தாய்வழி உறவினர்களால் வீண் அலைச்சலும், கருத்து வேறுபாடுகளும் வந்து போகும். குடியிருக்கும் வீட்டை மாற்ற வேண்டி வரும். சிலர் நகரத்திலிருந்து விலகி சற்றே ஒதுக்குப்புறமான பகுதிகளுக்கு குடிபெயர்வார்கள்.
ராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

புதனின் ரேவதி நட்சத்திரத்தில் 30.10.2023 முதல் 6.7.2024 வரை ராகு பகவான் சஞ்சாரம் செய்வதால் சாதுர்யமாகப் பேசி பல காரியங்களையும் சாதிப்பீர்கள். உங்களின் அனுபவ அறிவு கூடும். ஷேர் மூலம் பணம் வரும். மூத்த சகோதரர் உதவுவார். சனியின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 6.7.2024 முதல் 15.3.2025 வரை ராகு பகவான் சஞ்சாரம் செய்வதால் அதிரடியாக செயல்படுவீர்கள். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். தைரியமாக புதிய முதலீடுகள் செய்வீர்கள். வழக்கு சாதகமாகும். இடவசதியான வீட்டுக்கு மாறுவீர்கள்.

குருபகவானின் பூரட்டாதி நட்சத்திரத்தில் 15.3.2025 முதல் 19.5.2025 வரை ராகு பகவான் செல்வதால் சவாலான காரியங்களைக் கூட சாதாரணமாக முடிப்பீர்கள். செல்வாக்கு கூடும். வேலைச்சுமை அதிகரிக்கும். பெரிய பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வியாபாரத்தில் பெரிய முதலீடுகளால் போட்டிகள் ஒருபுறமிருந்தாலும் ராஜதந்திரத்தால் லாபத்தை பெருக்குவீர்கள். வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பேசி பழைய பாக்கிகளை வசூலிப்பீர்கள்.

உணவு, சிமெண்ட், புரோக்கரேஜ், மருந்து வகைகளால் இரட்டிப்பு லாபம் உண்டு. புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களிடம் கறாராகப் பேசி வேலையை விரைந்து முடிக்கப் பாருங்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியைப் பற்றி விமர்சனம் செய்ய வேண்டாம். சக ஊழியர்களின் ஆதரவு உண்டு. கணினி துறையிலிருப்பவர்களுக்கு அதிக சம்பளத்துடன் அயல்நாட்டில் வேலை கிடைக்கும். கலைத் துறையினரைப் பற்றிய கிசுகிசுக்கள் விலகும். பெரிய நிறுவனங்களிலிருந்து புது வாய்ப்புகள் வரும்.

கேதுவின் பலன்கள்: இதுவரை உங்களின் ராசிக்கு பதினோராவது வீட்டில் அமர்ந்து பணப்புழக்கத்தையும், பிரபலங்களின் நட்பையும் ஏற்படுத்திக் கொடுத்த கேது பகவான் இப்போது பத்தாவது வீட்டில் வந்தமர்வதால் எந்த வேலையையும் திறம்பட செய்து முடிக்கும் மனோபலத்தை தருவார். பிரச்சினைகளின் ஆணிவேரைக் கண்டறிந்து களைவீர்கள். குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்.

பிள்ளைகளின் வருங்காலத்தை மனதில் கொண்டு சேமிக்கத் தொடங்குவீர்கள். வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் தேடி வரும். மூத்த சகோதரருடன் இருந்த கருத்துமோதல்கள் விலகும். சகோதரியின் திருமணத்தை முன்னின்று நடத்துவீர்கள். உங்களை ஏமாற்றிக் கொண்டிருந்தவர்களை இனங்கண்டறிந்து ஒதுக்குவீர்கள். ஏளனமாகவும், இழிவாகவும் திட்டியவர்கள் எல்லாம் இனி உங்களை பாராட்டுவார்கள். வீடு, மனை வாங்கும்போது தாய் பத்திரத்தை சரி பார்த்துக் கொள்வது நல்லது.

கேது பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 30.10.2023 முதல் 4.3.2024 வரை கேது பகவான் செல்வதால் மதிப்பு, மரியாதை கூடும். சொத்துப் பிரச்சினை தீரும். அரசால் ஆதாயமடைவீர்கள். திடீர் பணவரவு உண்டு. பழைய கடனைத் தீர்க்க புது உதவிகள் கிடைக்கும். கமிஷன், ஃபைனான்ஸ் வகைகளால் பணம் வரும். சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் 4.3.2024 முதல் 8.11.2024 வரை கேது செல்வதால் கொஞ்சம் அலைச்சல் இருக்கும். குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளியிட வேண்டாம். யாரையும் விமர்சித்து பேசாதீர்கள். சொந்த வாகனத்தில் இரவு நேரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. விலை உயர்ந்த பொருட்களை இரவல் தர வேண்டாம். பணப் பற்றாக்குறை நீங்கும். முன்கோபத்தை குறைப்பது நல்லது. வேலை கிடைக்கும்.

சூரியனின் உத்திரம் நட்சத்திரத்தில் 8.11.2024 முதல் 19.5.2025 வரை கேது செல்வதால் வராது என்று நினைத்திருந்த பணம் கைக்கு வரும். பழைய கடனை பைசல் செய்வீர்கள். திருமணம் கூடி வரும். புது மனை புகுவீர்கள். வங்கிக் கடன் கிடைக்கும். சிலர் புதுத் தொழில் தொடங்குவீர்கள். தந்தையாருடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும். பிதுர்வழி சொத்து கைக்கு வரும். பாகப் பிரிவினை சுமுகமாகும்.

பெண்களுக்கு எல்லா வகையிலும் யோகமான அமைப்பு உண்டு. புகுந்த வீட்டு உறவினர்களிடம் விட்டுக்கொடுத்து போவது மிக மிக நல்லது. வியாபாரத்தில் பெரிய முதலை போட்டு வட்டியும் முதலுமாக எடுத்துவிடலாம் என்று அவசர முடிவுகளை எடுத்துவிடாதீர்கள். அரசுக்கு செலுத்தவேண்டிய வரிகளை முறையே செலுத்திவிடுங்கள். முரண்டுபிடித்த பங்குதாரர்கள் இனி உங்கள் பேச்சுக்கு முக்கியத்துவம் தருவார்கள்.

உத்தியோகத்தில் காலநேரமில்லாமல் உழைக்க வேண்டியது வரும். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பது நல்லது. மூத்த அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். எதிர்பார்த்த பதவி உயர்வை போராடி பெறுவீர்கள். சக ஊழியர்களிடம் கொஞ்சம் எச்சரிக்கையாகப் பழகுங்கள். இந்த ராகு - கேதுப் பெயர்ச்சி தோல்வி பயத்திலிருந்து உங்களை விடுவிப்பதுடன் தைரியமாக செயல்படவைத்து வெற்றிக்கனியை பறிக்க வைக்கும்.

பரிகாரம்: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியிலிருந்து 12 கி.மீ. தொலைவில் இருக்கும் நயினார்கோவில் எனும் ஊரில் அமைந்துள்ள ஸ்ரீ சௌந்தரநாயகி சமேத ஸ்ரீ நாகநாதரை வணங்குங்கள். புற்றுநோயாளிக்கு உதவுங்கள். செல்வம் சேரும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE