நிர்வாகத் திறமையும், அதிரடி திட்டங்களை தீட்டி நிறைவேற்றும் வல்லமையும், உதவும் குணமும், எதிரிக்கும் நல்லது செய்யும் மனோபாவமும் கொண்ட நீங்கள், எங்கும் எப்போதும் முதலிடத்தை தக்க வைத்துக் கொள்வதில் வல்லவர்கள்.
ராகுவின் பலன்கள்: இதுவரை உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் அமர்ந்து கொண்டு கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாதபடி செய்ததுடன், வருமானத்துக்கு வழியே இல்லாமல் தடுமாற வைத்த ராகு பகவான் இப்போது எட்டாம் வீட்டில் சென்று மறைகிறார். ராகு எட்டில் மறைவதால், நீங்கள், இனி ஓரளவு நிம்மதியடைவீர்கள்.
நேர்பாதையில் பயணிப்பீர்கள். எதிர்பார்த்திருந்த வகையில் உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். வீட்டில் தள்ளிப் போய்க் கொண்டிருந்த சுபநிகழ்ச்சிகள் இனி சிறப்பாக நடக்கும். தம்பதிக்குள் ஏற்படும் பிரச்சினையை உடனே பேசி தீர்த்துக் கொள்ளவும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் தெரியும். உங்கள் மகனுக்கு எதிர்பார்த்த கல்வி பிரிவில் இடம் கிடைக்கும். உயர்கல்வியில் வெற்றி பெறுவார். வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். சொந்த வீடு கட்டுவீர்கள்.
ராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: புதன்பகவானின் ரேவதி நட்சத்திரத்தில் 30.10.2023 முதல் 6.7.2024 வரை ராகு பகவான் செல்வதால் ஓரளவு பணவரவு உண்டு. மூத்த சகோதரர் உதவுவார். சனி பகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 6.7.2024 முதல் 15.3.2025 வரை ராகு பகவான் செல்வதால் தடுமாற்றம், பணத் தட்டுப்பாடு, சொத்து பிரச்சினை, தாயாருக்கு கை, கால் அசதி, வலி வந்து நீங்கும். குடும்ப விஷயங்களைப் பற்றி அக்கம் - பக்கத்தினரிடம் விவாதிக்க வேண்டாம்.
குரு பகவானின் பூரட்டாதி நட்சத்திரத்தில் 15.3.2025 முதல் 19.5.2025 வரை ராகு பகவான் சஞ்சாரம் செய்வதால் எதிர்பார்த்த பணம் வரும். மகளுக்கு திருமணம் முடியும். குழந்தை பாக்கியம் உண்டாகும். வியாபாரத்தில் பெரிய முதலீடுகளைப் போட்டு நஷ்டப் படாதீர்கள். வாடிக்கையாளர் களிடம் கனிவாக பேசுங்கள். உத்தி யோகத்தில் தொல்லை தந்த மேலதிகாரியே இனி உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். இழந்த சலுகையை மீண்டும் பெறுவீர்கள். கணினி துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும்.
» தாக்குதல் குறித்த புகாரை காவல் துறை பதிவு செய்யவில்லை: தமிழக ஆளுநர் மாளிகை குற்றச்சாட்டு
» நெல்லையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட உதயநிதி பேனர்களை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு
கேதுவின் பலன்கள்: கேது பகவான் இப்போது ராசிக்கு இரண்டாவது வீட்டில் நுழைகிறார். இனி சாதுர்யமான பேச்சால் சாதிப்பீர்கள். அலுவலகத்தில் உங்கள் மதிப்பு உயரும். பணவரவு, யோக பலன்கள் உண்டாகும். மகள், மகனுக்கு எதிர்பார்த்தபடி வேலை கிடைக்கும். அயல்நாட்டுப் பயணங்கள் தேடி வரும்.
கேதுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 30.10.2023 முதல் 4.3.2024 வரை கேது பகவான் சஞ்சாரம் செய்வதால் இக்காலகட்டங்களில் பணப்புழக்கம் அதிகரிக்கும். புது வேலை கிடைக்கும். சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் 4.3.2024 முதல் 8.11.2024 வரை கேது செல்வதால் புது சொத்து வாங்குவீர்கள். திடீர் பயணங்கள் அதிகரிக்கும்.
சூரியனின் உத்திரம் நட்சத்திரத்தில் 8.11.2024 முதல் 19.5.2025 வரை கேது செல்வதால் வாழ்வின் சூட்சுமத்தை அறிவீர்கள். தொட்ட காரியங்கள் துலங்கும். பெண்கள் பேசும்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்கவும். மின் சாதனங்களை பயன்படுத்தும்போது கவனம் தேவை. வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து செயல்படப் பாருங்கள். உத்தியோகத்தில் கொஞ்சம் கவனமாக இருங்கள். வேலைச்சுமை அதிகரிக்கும். இந்த ராகு-கேது மாற்றம் உங்களை சந்தர்ப்ப சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல் செயல்படவைக்கும் அனுபவ அறிவை தருவதுடன், ஓரளவு வசதி வாய்ப்புகளையும், நிம்மதியையும் தருவதாக அமையும்.
பரிகாரம்: சென்னையிலிருந்து திருப்பதிக்கு முன்புள்ள ஸ்ரீ காளஹஸ்தியில் அருள்பாலிக்கும் ஸ்ரீ காளத்திநாதரையும், ஸ்ரீ ஞானப்பூங்கோதையையும் வணங்குங்கள். இதய நோயாளிக்கு உதவுங்கள். நிம்மதி கிடைக்கும். மூட்டை தூக்கும் தொழிலாளிக்கு உதவுங்கள். சுபிட்சம் உண்டாகும்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்