துலாம் ராசியினருக்கான அக்டோபர் மாத பலன்கள் முழுமையாக | 2023

By Guest Author

துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - ராசியில் கேது - சுக ஸ்தானத்தில் சனி(வ) - களத்திர ஸ்தானத்தில் குரு(வ), ராகு - லாப ஸ்தானத்தில் சுக்ரன் - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய், சூர்யன், புதன் என கிரகநிலைகள் உள்ளது.

கிரக மாற்றங்கள்: 04-10-2023 அன்று செவ்வாய் பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 08-10-2023 அன்று ராகு பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 08-10-2023 அன்று கேது பகவான் ராசியில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 15-10-2023 அன்று புதன் பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார் | 17-10-2023 அன்று சூரிய பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.

பலன்கள்: எந்த நிலையிலும் நேர்மை நெறி தவறாத தன்மை கொண்ட துலா ராசி அன்பர்களே... நீங்கள் தியாக மனப்பான்மை கொண்டவர்கள். இயல்பாக செயலாற்றலும் அறிவுத் திறனும் கொண்டவர்களாக இருப்பீர்கள். இந்த மாதம் குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். சுபச்செலவுகள் உண்டாகும். பல வகையிலும் முயன்று வருமானத்தை ஈட்டுவீர்கள். குடும்பத்தினருடன் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வீர்கள். சிலர் சொந்த வீடு வாங்குவார்கள். உங்கள் பொறுப்புகளை எவ்வளவு விரைவில் முடிக்க முடியுமோ அவ்வளவு விரைவில் முடித்து விடுவீர்கள்.

தெய்வீக காரியங்களில் ஈடுபாடு கொள்வீர்கள். பயணங்கள் மேற்கொண்டு புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். உங்களைத் தேடி நல்ல செய்திகள் வந்துகொண்டிருக்கும். அரசாங்கத்திலிருந்து வந்து கொண்டிருந்த கெடுபிடிகளும் குறையும். சமுதாயத்தில் உயர்ந்தோரை நாடிச் சென்று அவர்களின் ஆலோசனைகளால் பயனடைவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு நீங்கள் விரும்பும் இடமாற்றம் கிடைக்கும். ஆனால் மேலிடத்துடன் சிறிது இணக்கமாக செல்வது நல்லது. சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். உங்கள் மீது மற்றவர்கள் வீண் குற்றச்சாட்டு சுமத்த நேரலாம். பணிகளின் நிமித்தமாக அடிக்கடி பிரயாணங்கள் ஏற்படும்.

தொழில்துறையினருக்கு சக போட்டியாளர்கள் மூலம் தேவையற்ற வீண் மன உளைச்சல் ஏற்படலாம். உங்களிடம் வேலை பார்க்கும் தொழிலாளர்களிடம் கனிவான உறவை கடைபிடிப்பது நல்லது. அதிக வருமானம் பெற அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். பங்குதாரர்களிடம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

மாணவமணிகளுக்கு கல்வியில் சிறிது ஆர்வகுறைவு ஏற்படலாம். மனதை நிலையாக்கிக் கொள்ளவும். விளையாட்டில் சாதனைகளை படைப்பீர்கள். அதிக மதிப்பெண்கள் எடுப்பதற்கு அதிகமான முயற்சி தேவை. சோம்பல் கூடவே கூடாது.

கலைத்துறையினருக்கு உங்களுக்குக் கிடைக்கும் சிறு வாய்ப்புகளைக் கூட வீணாக்காமல் பயன்படுத்துவது நல்லது. உங்கள் திறமைகளை வெளிக்கொண்டு வர சிறந்த காலகட்டம் இதுவாகும். பாராட்டு புகழ் விருது உங்களைத் தேடி வரும்.

அரசியல்வாதிகளுக்கு உங்கள் மீது தலைமை அதிகமான நம்பிக்கை கொள்ளும். உங்கள் நண்பர்களே உங்களுக்கு எதிராக செயல்படலாம். உங்களுடைய விசுவாசத்திற்கு மேலிடம் உங்களுக்கு சரியான பதவிகளை அளிப்பார்கள்.

பெண்களுக்கு குடும்பத்தில் கலகலப்பு அதிகரிக்கும். அனைவரிடமும் கனிவாக நடந்து கொள்வது சிறந்தது. நெருக்கடியான நேரத்தில் பக்குவத்தையும், பொறுமையையும் கடைபிடிப்பது சிறந்தது. கருவுற்றிருக்கும் பெண்கள் நிதானமாக இருப்பது அவசியம்.

சித்திரை 3, 4 பாதங்கள்: இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நீங்கி விறுவிறுப்படையும். வசூலாக வேண்டிய கடன்பாக்கிகள் வசூலாகும். தொழில் தொடர்பான பிரச்சினைகள் தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி தொடர்பான கஷ்டங்கள் குறையும்.

சுவாதி: இந்த மாதம் குடும்பத்தில் மரியாதை கூடும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு இருக்கும். கணவன், மனைவிக்கிடையில் மனம்விட்டு பேசி எடுக்கும் முக்கிய முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.

விசாகம் 1, 2, 3 பாதங்கள்: இந்த மாதம் அடுத்தவர் செய்யும் நற்காரியங்களுக்கு ஆதரவாக இருப்பீர்கள். மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். வீண்கவலை நீங்கும். தடைபட்ட காரியங்களில் தடை நீங்கி சாதகமாக நடந்து முடியும். வழக்கு விவகாரங்களில் சாதகமான நிலை காணப்படும்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் சப்தகன்னியரை அர்ச்சனை செய்து வழிபட எல்லா நன்மைகளும் உண்டாகும். செல்வம் சேரும். செல்வாக்கு உயரும் | அதிர்ஷ்டகிழமைகள்: திங்கள், செவ்வாய் | சந்திராஷ்டம தினங்கள்: 3, 4, 5, 31 | அதிர்ஷ்ட தினங்கள்: 24, 25

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE