நாட்டியாஞ்சலி: கவனத்தை ஈர்த்த திருநங்கை

By செய்திப்பிரிவு

சிதம்பரம் நாட்டியாஞ்சலி விழா வியாழக்கிழமை தொடங்கியது. இதில் திருநங்கை நர்த்தகி நடராஜின் நடனம் அனைவரையும் கவர்ந்தது.

மதுரையை சொந்த ஊராகக் கொண்ட அவர் 6 வயது முதல், தஞ்சையைச் சேர்ந்த குரு கிட்டப்பாவிடம் பரதம் பயின்று, 1986-ல்

சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் அரங்கேற்றம் செய்துள்ளார். தொடர்ந்து நாட்டியாஞ்சலி விழாவில் பங்கேற்று நடனமாடி வருகிறார்.

இதில் பங்கேற்பது தனக்கு மனநிறைவை தருவதாகக் கூறும் நர்த்தகி, இன்றளவும் தொடர்ந்து நாட்டிய நிகழ்ச்சிகளுக்காக அமெரிக்கா, இலங்கை, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று வருவதாகவும் தெரிவித்தார்.

தற்போது சென்னை மயிலாப்பூரில் வசிக்கும் அவர் வெள்ளி அம்பலம் எனும் நாட்டியப் பள்ளியை இங்கு உருவாக்கி, லண்டன், அமெரிக்கா, கனடா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளிலும் அதனை விரிவுபடுத்தி ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நடனம் பயிற்றுவிக்கிறார்.

ஆயிரங்கால் மண்டபத்தில் நடனமாட விரும்பும் நடன கலைஞர்கள்

1981-ம் ஆண்டு முதல் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் நாட்டியாஞ்சலி நடைபெறுகிறது. 32 ஆண்டுகளில் 1,600 நிகழ்ச்சிகளில் சுமார் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கலைஞர்கள் நடனமாடியுள்ளனர்.

நடராஜர் நாட்டியமாடியதாகக் கருதப்படும் ஆயிரங்கால் மண்டபத்தில்தான் 1986-ம் ஆண்டு வரை நாட்டியாஞ்சலி நடைபெற்றது. பின்னர் திடீரென கோயிலின் புதர் மண்டிக் கிடக்கும் பகுதியில் மேடை அமைத்து, கடந்த 26 வருடங்க ளாக நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி அங்கு நடைபெறு கிறது. ஆரூத்ரா தரிசனத்தின்போது நடராஜரும் சிவகாமியும் நடனமாடிய ஆயிரங்கால் மண்டபத்தை நினைவுகூரவே நாட்டியாஞ்சலி நடைபெறுகிறது. எனவே ஆயிரங்கால் மண்டபத்தில் ஆடவேண்டும் என்பதுதான் பலரது லட்சியம். இதுதொடர்பாக சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை செயலர்சம்மந்தத்திடம் கேட்டபோது, நாட்டியாஞ்சலி நிகழ்ச்சிக்காக வருவோர் கோயிலினுள் செருப்பு அணிந்து வருகிறார்கள்; மேலும் மண்டபத்தில் அதிக அளவில் உட்கார்ந்து காண இயலாது என்பதால் வெளிப்பிரகாரத்தில் நடத்தப்படுவதாக தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE