Published on : 28 Mar 2025 18:35 pm
அடுத்த ஆண்டில் தமிழகம் இதுவரை சந்திக்காத ஒரு தேர்தலை சந்திக்கும் என்றும் தமிழக பெண்கள்தான் திமுக ஆட்சிக்கு முடிவு கட்டபோகிறார்கள் என்றும் மத்தியில் பாஜக ஆட்சிக்கு கொஞ்சமும் குறைவில்லாத பாசிச ஆட்சிதான் திமுகவும் நடத்துவதாகவும் விஜய் விமர்சித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், அக்கட்சியின் தலைவர் விஜய் பேசியதில் 15 தெறிப்புகள் இவை...
“கதறல் சத்தமெல்லாம் எப்படியிருக்கு? இன்றைக்கு தமிழ்நாடு இருக்கின்ற சூழலில், நாம் ஒரு புதிய வரலாற்றைப் படைப்பதற்கு தயாராக வேண்டியது அவசியம்.”
“அரசியல் என்றால் என்ன? ஒவ்வொரு குடும்பமும் நல்லா வாழ வேண்டும் என்று நினைப்பது அரசியலா? இல்லை, ஒரே ஒரு குடும்பம் மட்டும் தமிழ்நாட்டை சுரண்டி நல்லா வாழ்வது அரசியலா? எல்லோருக்கும் நல்லது நடப்பதுதானே அரசியல். அதுதான் நம்ம அரசியலும்.”
“கட்சிக்கு திராவிடம், ஆட்சிக்கு திராவிட மாடல்னு, தினம் தினம் மக்கள் பிரச்சினைகளை மடைமாற்றி, மக்கள் ஆட்சியை மன்னராட்சிப் போல நடத்தும் இவர்கள், நமக்கு எதிராக செய்யும் செயல்கள் ஒன்றா, இரண்டா?”
“மாநாடு தொடங்கி இன்று வரை எங்கெல்லாம் எப்படியெல்லாம் தடைகள் வந்தன? அத்தனை தடைகளையும் தாண்டி தவெக தொண்டர்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கும். அது தொடர்ந்து நடக்கும்.”
“மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே, பெயரை மட்டும் வீராப்பாக சொன்னால் பத்தாது, செயலிலும் ஆட்சியிலும் அதைக் காட்ட வேண்டும்.”
“மத்தியில் ஆளும் பாஜக ஆட்சியை ஒரு பாசிச ஆட்சி என்று அடிக்கடி அறிக்கைகள் கொடுத்துவிட்டு, இங்கு நீங்கள் செய்யும் ஆட்சி மட்டும் என்னவாம்? அதற்கு கொஞ்சம்கூட குறைவில்லாத அதே பாசிச ஆட்சிதானே!”
“என் தொண்டர்களையும் என் மக்களையும் பார்ப்பதற்கு தடை போடுவதற்கு நீங்கள் யார்? சட்டத்தை மதிக்க வேண்டும் என்பதால் அமைதியாக இருக்கிறேன். தடையை மீறி என் மக்களை பார்க்க வேண்டும் என்றால் சென்றே தீருவேன்!”
“அணை போட்டு ஆற்றை வேண்டுமானால் தடுக்கலாம். காற்றைத் தடுக்க முடியாது. அதையும் மீறி தடுக்க நினைத்தால், சாதாரணமாக இருக்கும் காற்று சூறாவளியாக மாறும். ஏன் சக்திமிக்க புயலாக கூட மாறும்.”
“முதல்வரே, உங்கள் ஆட்சியில் படிக்கும் பெண் குழந்தைகள், வேலைக்கு செல்லும் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளை பற்றிச் சொல்ல முடியவில்லை. இதில் உங்களை அப்பா என்று அழைக்கிறார்களாம். தினம் தினம் கொடுமைகளை அனுபவித்து கொண்டிருக்கும் இதே தமிழக பெண்கள்தான் உங்க அரசியலுக்கும், ஆட்சிக்கும் முடிவு கட்டபோகிறார்கள்.”
“பிரதமர் மோடி அவர்களே, என்னமோ உங்களது பெயர்களை எல்லாம் சொல்வதற்கு எங்களுக்கு எல்லாம் ஏதோ பயம் என்று சிலர் கூறுகின்றனர். மத்தியில் ஆள்பவர்கள் என்று சொல்கிறோம். மத்தியில் ஆட்சியில் இருப்பது யார் காங்கிரஸா? மாநிலத்தில் ஆள்பவர்கள் என்று பேசுகிறோம். இங்கு ஆள்பவர்கள் யார் அதிமுகவா? பிறகு என்ன பெயர் சொல்ல வேண்டும் என்று கூறுவது? எனக்கு ஒன்றும் புரியவில்லையே!”
“வாக்குக்காக காங்கிரஸ் உடன் தேர்தல் கூட்டணி. கொள்ளை அடிப்பதற்காக பாஜக உடன் மறைமுக அரசியல் கூட்டணி. இப்படி உங்களது பெயரைச் சொல்லியே மக்களை ஏமாற்றுவதும், உங்களது பெயரைச் சொல்லியே மக்களை பயமுறுத்துவதும், இப்படி இந்த கரப்ஷன் கபடதாரிகளுக்கு மறைமுகமாக உதவும். பாஜக அரசுக்கு ஏன் ஜி? தமிழ்நாடு தமிழர்கள் என்றாலே அலர்ஜி?”
“தமிழகத்தில் வரும் ஜிஎஸ்டி-யை சரியாக வாங்கிக் கொள்கிறீர்கள். ஆனால் தமிழகத்துக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யமாட்டேன் என்கிறீர்கள். தமிழக குழந்தைகளின் கல்விக்கு நிதி ஒதுக்கீடு செய்ய மறுக்கிறீர்கள். ஆனால் மும்மொழிக் கொள்கையைத் திணிக்கிறீர்கள்.”
“தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தமிழகத்தின் நாடாளுமன்ற தொகுதிகளிலும் கை வைக்கப் பார்க்கிறீர்கள். ஒரே நாடு ஒரே தேர்தல் என்று நீங்கள் தொடங்கும்போதே உங்கள் திட்டம் என்னவென்று புரிந்துவிட்டது பிரதமர் சார்.”
“எங்கு, எப்படி எந்த திசையில் எல்லாம் இந்த நாட்டைக் கொண்டு செல்லலாம் என்பது. உங்களிடம் நாங்கள் கேட்டுக் கொள்வது, தமிழகத்தைக் கொஞ்சம் கவனமாக கையாளுங்கள். காரணம், தமிழகம் பல பேருக்கு தண்ணீர் காட்டிய மாநிலம். பார்த்துக் கொள்ளுங்கள், பார்த்து செய்யுங்கள்.”
“தவெக ஆட்சி உண்மையான மக்கள் ஆட்சி. தவெக தலைமையில் பெரும்பான்மை பெற்ற ஆட்சி. அதிகாரப் பகிர்வுடன் கூடிய ஆட்சி. அப்படியாக இந்த ஆட்சி அமைந்ததும் பெண்கள் பாதுகாப்பை நூறு சதவீதம் உறுதி செய்வோம். சட்டம் - ஒழுங்கை முறையாக கண்டிப்பாக வைத்திருப்போம். கல்வி, சுகாதாரம், மருத்துவத்தில் கவனம் செலுத்துவோம். அதுவும், அனைவருக்கும் எளிதாக, சமமாக கிடைப்பதை உறுதி செய்வதுதான் தவெகவின் இலக்கு. 2026-ல் தவெகவுக்கும், திமுகவுக்கும் தான் போட்டி. அதில் தவெகவுக்கு வெற்றி நிச்சயம்” என்று விஜய் பேசினார்.