Published on : 30 Jan 2025 17:47 pm
ஒவ்வாமை காரணமாக நமது சுவாசப் பாதையில் ஏற்படும் வீக்கத்தினாலோ சுருக்கத்தினாலோ சீரான சுவாசம் தடைப்படுவதே ஆஸ்துமா.
ஆஸ்துமா ஒருவரிடம் இருந்து மற்றவருக்குப் பரவாது. ஆஸ்துமா ஏற்பட்டால், அது நோயாளியின் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும். ஆஸ்துமா உயிரிழப்பை ஏற்படுத்தாது.
அன்றைய காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, தற்போதைய நவீன மருத்துவத் தொழில்நுட்பம் நோய் கண்டறிதலையும், முறையான சிகிச்சையையும் எளிதாக்கி இருக்கிறது.
இந்தியாவில் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்களில் 70% தாங்கள் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியாமல் அல்லது முறையான சிகிச்சை பெறாமல் வாழ்ந்துவருகின்றனர்.
இந்தியாவில், மூன்று கோடிக்கும் மேலானோர் ஆஸ்துமாவால் அவதிப்படுகின்றனர்; 10 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளில் 18 சதவீதத்தினர் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆஸ்துமா பாதிப்பின்போது, சளியானது, ஏற்கெனவே சுருங்கியிருக்கும் சுவாசப் பாதையில் அடைப்பை ஏற்படுத்தி, தீவிர மூச்சுத் திணறலை உருவாக்குகிறது.
ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர் வெளியிடும் மூச்சு ஒரு வித விசில் சத்தத்துடன் வெளியேறும். ஆஸ்துமா சிறுவர், பெரியவர் வயது வித்தியாசமின்றி பாதிக்கிறது.
ஒவ்வாமையும் மரபுவழி தன்மையும்தான் ஆஸ்துமா பாதிப்பு ஏற்படுவதற்கான முக்கியக் காரணங்கள்.
உணவு, உடை, தூசு, புகை, புகைபிடித்தல், வாசனைத் திரவியங்கள் போன்றவற்றால் தூண்டப்படும் ஒவ்வாமையால் ஆஸ்துமா பாதிப்பு ஏற்படலாம்.
குளிரான தட்பவெப்ப நிலை, கடுமையான வெப்பநிலை ஆகிய இரண்டினாலும் ஆஸ்துமா ஏற்படும் சாத்தியம் உண்டு.
மன அழுத்தம், கோபம், பயம், மனக் குழப்பம், அதிகமாக உணர்ச்சிவசப்படுதல் போன்ற உளவியல் சார்ந்த பிரச்சினைகளும் ஆஸ்துமாவை ஏற்படுத்தக்கூடும்.
நாம் சாப்பிடும் சில மருந்துகளால்கூட ஆஸ்துமா பாதிப்பு ஏற்படும் ஆபத்து உண்டு. | தகவல்கள்: டாக்டர் எம். அருணாசலம்