Published on : 07 May 2020 23:10 pm

பேசும் படங்கள்... (07.05.2020)

Published on : 07 May 2020 23:10 pm

1 / 18
போதையின் பாதையில்: எந்த வேலையும் இன்றி... எந்த ஊதியமும் இன்றி... அன்றாட சாப்பாட்டுக்கே கஷ்டப்படும்... பாவப்பட்ட ஜீவராசிகள் வேலை கேட்டு, உணவு கேட்டு... நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள் என்று நினைத்துவிடாதீர்கள். இவர்கள் - பொன்னேரி தச்சூர் கூட்டு ரோட்டில் சமூக இடைவெளியை காற்றில் பறக்கவிட்டு போதை திரவத்தை வாங்க காத்திருந்த கூட்டம். - படம்: எல்.சீனிவாசன்
2 / 18
அடுப்பில் பூனைக்குட்டி... கையில் மது டோக்கன்: ஊரடங்கு காரணமாக - வெம்பிப் போய்... வெதுங்கிப் போய்... காத்திருந்த மதுப்பிரியர் ஒருவர் 45 நாட்களுக்குப் பிறகு நேற்று போதை மலையேற பொன்னேரி தச்சூர் கூட்டு ரோட்டில் உள்ள மதுக்கடையில் டோக்கன் கிடைத்ததை... நம் கேமரா கண்களுக்கு முன் சந்தோஷமாக நீட்டினார். பாவம் அவர் வீட்டு அடுப்பில் பூனைக்குட்டித் தூங்கலாம்! படம்: எல்.சீனிவாசன்
3 / 18
மதுவுக்கு எதிராக கனிமொழி: தமிழகமெங்கும் - கரோனா தொற்றுப் பாதிப்பைத் தடுக்க ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. இதையடுத்து சில கட்டுப்பாடு தளர்வுகளை அரசு அறிவித்ததுடன், சென்னையைத் தவிர மாநிலத்தின் மற்ற பகுதிகளில் இன்று (வியாழக்கிழமை) முதல் மதுக்கடைகளையும் திறந்துள்ளது. டாஸ்மாக் மதுக் கடைகளைத் திறக்கும் தமிழக அரசுக்கு எதிராக தி.மு.க சார்பில் கனிமொழி எம்பி இன்று தனது இல்லத்தின் முன்பு கருப்பு உடை அணிந்து எதிர்ப்பு முழக்கம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார், படம்: எல்.சீனிவாசன்
4 / 18
சென்னையை நோக்கி நேற்று வந்த ஹூண்டாய் கார் ஒன்று ஊரப்பாக்கம் அருகே வந்தபோது... திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். காரில் இருந்தவர்களுக்கு எந்த சேதமும் இல்லை. படம்: எல்.சீனிவாசன்
5 / 18
இந்த மூன்று பேரும் எதை மறைத்து மறைத்து எடுத்துச் செல்கிறார்கள் என்பதை சொல்பவர்களுக்கு லட்ச ரூபாய் பரிசு என்று சொல்லி... உங்களை ஏமாற்ற விரும்பவில்லை. 40 நாட்களுக்கும் மேலாக திறக்கப்படாத மதுபானக் கடைகள் நேற்று திறக்கப்பட்டதையொட்டி... செங்கல்பட்டு பகுதியில் உள்ள மதுபானக் கடையில் தாங்கள் வாங்கிய மதுப்பாட்டில்களைத்தான் இப்படி மறைத்து வைத்து இவர்கள் எடுத்துச் செல்கிறார்கள். படங்கள்: எம்.முத்துகணேஷ்
6 / 18
7 / 18
பசியோடு உணவுக்காக ஓட்டலுக்கு அருகில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் இவர்கள்... போதை பசிக்காக மது பானம் வாங்க.... சமூக இடைவெளியின்றி அணி வகுத்துள்ளனர். இடம்: செங்கல்பட்டு பேருந்து நிலையம் அருகில். படம்: எம்.முத்து கணேஷ்
8 / 18
செங்கல்பட்டு பகுதிகளில் 45 நாட்களுக்குப் பிறகு மீண்டும் நேற்று 10-க்கும் மேற்பட்ட மதுக்கடைகள் திறந்ததால்... மது பாட்டில்கள் வாங்க 6 மணி நேரத்துக்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்த குடிமகன்கள். படம்: எம்.முத்து கணேஷ்
9 / 18
கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் இருக்கும் இவ்வேளையில் 45 நாட்களுக்குப் பிறகு சென்னையைத் தவிர மாநிலத்தின் மற்றப் பகுதிகளில் நேற்று மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன. சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மதுபானக் கடைகள் திறக்கப்படாததால்... மது விரும்பிகள் சென்னைக்கு அருகில் இருக்கும் செங்கல்பட்டுக்குச் சென்று மது வாங்கி வர முயற்சிக்கலாம் என்பதால்... அதை தடுக்க பரனூர் சுங்கச்சாவடி மற்றும் செங்கல்பட்டு நுழைவு எல்லைகளை போலீஸார் தடுப்புகளை ஏற்படுத்தி இருந்தனர். இதனால் அந்தப் பகுதி முழுவதும் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு... நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து காத்திருந்தன. படம்: எம். முத்து கணேஷ்
10 / 18
தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருந்த 45 நாட்களுக்குப் பிறகு சென்னையைத் தவிர தமிழகத்தின் மற்றப் பகுதிகளில் மதுபானக் கடைகளைத் திறக்க அரசு உத்தரவிட்டது. இதையொட்டி நேற்று முதல் டாஸ்மாக் மதுபானக் கடைகள் இயங்க ஆரம்பித்தன. இந்நிலையில் - மதுரை செல்லூர் மெயின் ரோட்டில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையின் முன்பு, மதுக்கடைகளைத் திறக்கக் கூடாது எனக் கூறி மறியலில் ஈடுபட்ட பெண்கள். படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
11 / 18
வேலையில் சேருவதற்காக - நேர்க்காணலுக்காக காத்திருப்பவர்கள் என்று தவறாக எண்ணிவிட வேண்டாம். திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள மதுபானக் கடையொன்றில் - மது வாங்க போலீஸ் பாதுகாப்புடன் சேரில் வரிசையாக காத்திருக்கிறார்கள்.
12 / 18
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையில் மிகுந்த வெட்கத்துடன்.... தன்மானம் சிதைந்துவிடுமோ என்கிற கவலையில்.... தான் மது வாங்குவதை தனது மனைவியோ.... தன் மகனோ... தனது மகளோ பார்த்துவிட்டால்... தனது ஆண் திமிருக்கு பங்கம் வந்துவிடுமோ என்கிற பேரச்சத்தில்.... முகத்தை காட்ட விரும்பாமல் ஹெல்மெட் மண்டையுடன் வந்து மதுபானம் வாங்குகிறார் குடிமகன் ஒருவர்.
13 / 18
இலையில் நிற்கிறார் ஒருவர். அவருக்கு என்னாச்சு? மது வாங்க வந்து நீண்ட வரிசையில் காத்திருந்த குடிமகன் ஒருவருக்கு வெய்யில் காலை சுட்டுப் பொசுக்கியதால்தான் இப்படி நிற்கிறார். கவலைப்படாதீர்கள்... கொஞ்சம் நேரம்தான் இப்படி நிற்பார். அப்புறம் சரிந்துவிடுவார். படங்கள்: ஜி.ஞானவேல் முருகன்
14 / 18
சேலத்தில் நேற்று காலையில் சேலம் டவுன் ரயில் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் மதுக் கடையொன்றில் - மது வாங்க வந்த ஒருவர்... மது வாங்க ஆதார் அட்டை அவசியம் என்று அறிவிக்கப்பட்டிருந்ததால்... ’’மறக்காம ஆதார் அட்டையை எடுத்து வந்துட்டேன் சார்... எப்பூடி’’ என்றார் மனசெல்லாம் மகிழ்ச்சியுடன். படம்: எஸ்.குரு பிரசாத்
15 / 18
முதுமையெனும் பூங்காற்று: தமிழக அரசின் உத்தரவின்படி தமிழகத்தில் - சென்னையைத் தவிர பிற இடங்களில் இன்று (7.5.2020) காலை முதல் டாஸ்மாக் மதுக் கடைகள் திறக்கப்பட்டன. சேலம் - முள்ளுவாடி ரயில்வே கேட் அருகே மதுக் கடை திறப்பதற்கு முன்பே கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஆயிரக்கணக்கான குடிமகன்கள்... நீண்ட வரிசையில் காத்திருக்க... அதே வேளையில்... வயிற்று பசிக்காக தலை நிறைய சுமையை தூக்கிக் கொண்டு உழைப்பின் வேதத்தை உச்சரித்தபடியே... செல்லும் முதியவரின் உழைப்பின் கம்பீரம் சாலையில் நடந்து சென்ற பார்வையாளர்களின் சமநிலையை நிலைகுலைய வைத்தது. படம்: எஸ்.குரு பிரசாத்.
16 / 18
சென்னையில் வசித்து வந்த ராஜஸ்த்தான் மக்கள் சென்னையில் கரோனா வைரஸ் தாக்ககம் அதிகமாக இருப்பதால் தாங்கள் சொந்த செலவில் டிராவல்ஸ் பேருந்துகளை பதிவுசெய்து, தங்கள் சொந்த ஊருக்கு செல்ல தொடங்கியுள்ளனர். 4 பேருந்தில் 120-க்கும் மேற்பட்டோர் நேற்று சென்னை கொண்டித்தோப்பு வால்டாக்ஸ் சாலையில் இருந்து புறப்பட்டு சென்றனர். படம்: க,ஸ்ரீபரத்
17 / 18
கரோனா தொற்று தடுப்புக்காக தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் இன்று முதல் தமிழகத்தில் சென்னையைத் தவிர பிற பகுதிகளில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கபடும் என அரசு அறிவித்தது. இப்படி மதுக்கடைகள் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவரது குடும்பத்தினர் மற்றும் கட்சியினருடன் அவரது ஆழவார்ப்பேட்டை வீட்டு வாசலில்சமூக இடைவெளியுடன் கருப்பு உடையுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினார். படம்: ஸ்ரீ பரத்
18 / 18

Recently Added

More From This Category

x